நீட் தேர்வு.. என்னதான் சாதிக்கப்போறீங்க? எத்தனை பசங்களை சாகடிக்கப்போறாங்க.. கொதிக்கும் மாணவன்
சென்னை: நீட் தேர்வு இன்னும் எத்தனை மாணவர்களை காவு வாங்கப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு மாணவர். நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்றும் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தந்தையும் இன்று உயிரை மாய்த்துக்கொண்டார்.
NEET (National Entrance Cum Eligibilty Test), இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS மற்றும் JIPMER ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும்.

இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. National Testing Agency என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு 10க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. அரியலூர் அனிதா தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை நீட் தேர்வினால் உயிர்பலி வாங்கப்பட்டவர்கள். தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பது மாணவர்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசேதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்என் ரவி நீண்ட நாட்களுக்கு பிறகு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இன்னும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் இளநிலை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12ம்தேதி நடைபெற்றது. இதில் அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். மேலும் மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் தந்தை, நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்? என்ற கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பது என்பது மாணவர்களின் போட்டிபோடும் திறனை கேள்விக்குறி ஆக்கிவிடும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கலாம். நீட் தேர்வுக்கான விலக்கு அறிவுசார்ந்த மாணவர்களை மாற்றுத்திறனாளிகளாக மாற்றி விடும். எனவே நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துள்ளார். குரோம்பேட்டையில் வசித்த வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கும் நோக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் மரணமடைந்த துக்கத்தில் இருந்த தந்தையும் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பை தொடர்ந்துள்ளனர். 2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். படிப்பை தொடர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் ஜெகதீஸ்வரன் மனக்குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்துதான் விரக்தியில் இருந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல், மருத்துவ கனவு வீணாகி போனதால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருவது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடன் படித்த ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது நண்பனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணம்தான் மருத்துவ படிப்பினை தீர்மானிக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஃபயாஸ்தின் என்ற அந்த மாணவர். நீட் தேர்வில் நான் 160 மதிப்பெண்தான் எடுத்தேன். என்னோட அப்பா வசதியாக இருந்ததனால் தனியார் மருத்துவ கல்லூரியில் 25 லட்சம் ரூபாய் பணம் கட்டி படிக்க சேர்த்து விட்டார்.
எனக்கு கஷ்டமா இருக்கு என்னோட கூட படிச்ச ஜெகதீஷ் நல்ல மார்க் எடுத்தார். அவனால 25 லட்சம் ரூபாய் கட்ட முடியவில்லை. அவன் நல்லா படிக்கிற பையன். 2 தடவை நீட் தேர்வு எழுதியும் நன்றாகத்தான் மார்க் எடுத்தார். அவரால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை 25 லட்சம் பணம் கட்ட முடியவில்லை. இங்கே எல்லாமே பொருளாதார அடிப்படையை மையமாக வைத்துதான் இருக்கிறது. அப்போ அதிகமாக பணம் கட்டி படித்தவர்கள் எப்படி சேவை மனப்பான்மையோடு டாக்டர் தொழில் செய்வார்கள்.
ஜெகதீஸ்வரன் இந்த முறை நீட் தேர்வில் 400 மார்க் எடுத்திருந்தார். அவருடைய அப்பாவினால் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் கட்டி படிக்க வைக்க வசதியில்லை. டாக்டராக முடியவில்லை என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் ஜெகதீஸ்வரன். இந்த தேர்வை வச்சு என்னதான் சாதிக்கப்போறீங்க? எத்தனை பசங்களை சாகடிக்கப்போறாங்கனு தெரியலை மத்திய அரசும் ஆளுநரும் என்றும் மாணவர் ஃபயாஸ்தின் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications