அடுக்கடுக்காய் ஒரே நாளில் 3 "நீட்" தற்கொலைகள்.. தேர்வை உடனே ரத்து செய்க.. வேல்முருகன் வேண்டுகோள்
தமிழகத்தில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் ஆற்றொணா துயரத்தை அளிக்கிறது என்று வேல்முருகன் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் ஆற்றொணா துயரத்தை அளிக்கிறது என்று வேல்முருகன் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தை இந்த தற்கொலைகள் உலுக்கி உள்ளது. தமிழகத்தில் தொடரும் நீட் மரணங்கள் குறித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அடுக்கடுக்காய் ஒரே நாளில் மூன்று "நீட்" தற்கொலைகள்.நீட் தேர்வு பயத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திரு.மோதிலால். என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
நாளை நீட் தேர்வு.. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 தற்கொலை.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. சோகம்!
அவரை இழந்து வாடும் அவரது பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் ஆற்றொணா துயரத்தை அளிக்கிறது. நீட் தேர்வு இந்தியா முழுவதும் ரத்து செய்யப்படுவது மட்டுமே மாணவ மாணவிகளின் தற்கொலைக்கு உடனடித் தீர்வாக அமையும்.
இனியும் மத்திய மாநில அரசுகள் இவற்றைக் கண்டும்காணாமல் கடந்து செல்லும் போக்கைக் கைவிட்டு மாணாக்கர்களின் உயிரை காப்பாற்ற நீட் தேர்வை ரத்து செய்யும் முடிவை காலம் தாழ்த்தாமல் விரைந்து எடுத்திட வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று வேல்முருகன் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.