2019 நீட் தேர்வுக்கான பதிவு தொடக்கத்திலேயே கிளம்பியது பிரச்னை... சர்வர் கோளாறால் சிக்கல்!
சென்னை : 2019 நீட் தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று முதல் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே பதிவு செய்ய முயற்சித்த மாணவர்களுக்கு சர்வர் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கப்படுகிறது. 2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வை சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில் 2019ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனிடையே 11 மணி முதலே இணையதளத்தில் பதிவு செய்ய முயன்றும் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சர்வர் கோளாறு காரணமாக மாணவர்களால் பதிவு செய்ய முடியவில்லை. நீட் தேர்வு என்றாலே அடுத்தடுத்து சர்ச்சை என்ற நிலையில் ஆரம்பமே இப்படியா என்று மாணவர்களின் பெற்றோர் முகம் சுளித்தனர்.
எனினும் சர்வர் பிரச்னை சரிசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் இருப்பதால் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய நாட்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் மாணவர்கள் தேர்வில் தோன்றுவதற்கான ஒப்புதல் கடிதங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2019, மே 6ல் நீட் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :
10ம் வகுப்பு மதிப்பெண் அட்டை
12ம் வகுப்பு மதிப்பெண் அட்டை
மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மாணவரின் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து
அடையாள அட்டை (ஆதார் அல்லது வாக்காளர் அட்டை)












Click it and Unblock the Notifications