மாணவி அனிதா நினைவு தினம்: நீட்டை ஒழித்து கட்டுவோம்.. அந்த நாள் நிச்சயம் வரும் - அமைச்சர் உதயநிதி
சென்னை: நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம் என்று மாணவி அனிதா நினைவு நாளை நினைவு கூர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. நீட் தேர்வினால் தமிழக ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு சிதைக்கப்படுவதாகவும், இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க வேண்டும் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரசாரத்தின் போது நீட்டை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியதாததால் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்வது தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 21 ஆம் தேதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணா விரத அறப்போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தரும் வரை ஓயமாட்டேன் எனக் கூறியிருந்தார். அதேபோல், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற ஒரு உதயநிதி போராடினால் போதாது இளைஞரணியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும் உதயநிதியாக மாறி போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் பேசும் போது அண்மையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற போது பலரும் நீங்கள் பங்கேற்றால் உங்கள் பதவிக்கு சிக்கல் வரும் எனக் கூறியதாகவும் ஆனால் பதவியை பற்றி தாம் பொருட்படுத்தவே இல்லை எனவும் தெரிவித்தார். இதனிடையே, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து 2017 செப்டம்பர் 1ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நாளான இன்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் இது குறித்த தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
மேலும் நீட் தேர்வை நிச்சயம் ஒழித்து கட்டுவோம் என சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும்.
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications