உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு... ராயபுரம் மனோ மனதை கரைக்கும் காங்கிரஸ்
சென்னை: வடசென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்த ராயபுரம் மனோ கடந்த 15 நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து அவர் திமுகவில் இணையவுள்ளார் என கூறப்பட்ட நிலையில் இதுவரை எந்தக் கட்சியிலும் சேராமல் தனது தொழிலை மட்டும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், ராயபுரம் மனோவிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னணி தலைவர்கள் பலர் பேசியதோடு, அவரை அவசரப்பட வேண்டாம் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
காங்கிரஸ்
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ராயபுரம் மனோ தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தனது பகுதியில் நடத்தி கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தவர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என காங்கிரஸ் தலைவர்களின் பிறந்தநாளை கூட சொந்த செலவில் ஏற்பாடு செய்து பாரிமுனையில் இருந்து ராயபுரம் வரை கட்சிக்கொடி, தோரணம், விளக்கு என அசத்தி பொதுக்கூட்டம் போடுவார்.
அதிருப்தி
ராயபுரம் மனோவிடம் இருந்த பதவியை பறித்து திருநாவுக்கரசர் திரவியத்துக்கு அளித்தார். அப்போது முதலே அதிருப்தியில் இருந்தாலும் மனோ அதை வெளிக்காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கே.எஸ்.அழகிரியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியே வேண்டாம் என்ற முடிவை எடுத்து கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
முடிவில்லை
இதையடுத்து ராயபுரம் மனோ திமுகவில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், எந்தக் கட்சியிலும் இப்போது சேரும் எண்ணம் தமக்கில்லை எனத் தெரிவித்தார். இதனிடையே ராயபுரம் மனோ போன்ற தீவிர செயல்பாட்டாளர்களை கட்சியிலிருந்து விடக்கூடாது என எண்ணிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
சிறந்த எதிர்காலம்
கடந்த வாரம் மனோவை அழைத்த மிக முக்கிய முன்னணி தலைவர் ஒருவர், உங்களுக்கு நம்ம கட்சியில் சிறந்த எதிர்காலம் இருக்கு, ஏன் அவசரப்படுகிறீர்கள், நான் சொல்வதை சிந்தித்து பார்த்து மீண்டு இணைந்து பணியாற்ற வாருங்கள் என கோரியுள்ளார். இருப்பினும் மனோ எந்த பதிலையும் அந்த தலைவருக்கு அளிக்கவில்லை.