நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில்.. இப்படி ஒரு இடியாப்ப சிக்கலா.. சென்னை மக்கள் எதிர்ப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ள நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நிற்காமல் செல்லும் என்பதை ஏற்க முடியாது என சென்னை மக்கள் எதிர்க்கிறார்கள். இதேபோல் கோவில்பட்டியில் கண்டிப்பாக நின்று செல்ல வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், நாடு முழுவதும் அடுத்தடுத்து அதிக வரவேற்பின் காரணமாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கிய வந்தே பாரத் ரயில் சேவைகள். நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை-மைசூரு, சென்னை-கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் பகல் நேர அதி விரைவுரயில்கள், அதேநேரம் குளிர்சாதன வசதி மற்றும் வேகமாக செல்ல முடியும் என்பதால் விமானத்தில் செல்லும் பலர் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கிறார்கள். சேலம் செல்ல விமானத்திற்கு பதில் வந்தே பாரத்தில் செலவ்து சிறப்பான முடிவாக இருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு நகர மக்கள் வந்தே பாரத் ரயிலை வரவேற்கிறார்கள்.சென்னை கோவை வந்தே பாரத் ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த காரணத்தால், தமிழ்நாட்டிலேயே அதிக லாபம் ஈட்டும் ரயில் வழித்தடமான சென்னை நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை பரிசீலித்த மத்திய அரசு நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்க அனுமதி அளித்தது.
இதனால் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன, காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் ஆகியவை வேகமாக முடிக்கப்பட்டன.
இதையடுத்து , வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும் வகையில் கால அட்டவணை தயாரித்துள்ளார்கள். ஒரே நாளில் நெல்லை, சென்னை இடையே பேருந்தில் போய்வர முடியவே முடியாது. போகவே குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் ஆகும். அந்த வகையில் நெல்லை சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு நிச்சயம் இருக்கும்,.
ஆனால் வந்தே பாரத் ரயிலில் உள்ள சிக்கல் என்னவென்றால், சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக 160 கிமீ தூரம் தள்ளி உள்ள விழுப்புரத்திலும், அதற்கு அடுத்தபடியாக 160 கிமீ தூரமுள்ள திருச்சியிலும் தான் நிற்கும்.அதேபோல் அதற்கு அடுத்து 105 கிமீ தூரமுள்ள திண்டுக்கல்லிலும், அதேபோல் அதற்கு அடுத்து உள்ள பெரிய நகரமான மதுரை மற்றும் விருதுநகரில் நிற்கும் என்று அறிவித்துள்ளார்கள்.
சிக்கல் என்ன: வந்தே பாரத் ரயில் என்பது தென்மாவட்டங்களுக்கு முதல்முறையாக விடப்பட்டுள்ளது. மிக விரைவாக திருச்சி, மதுரை, நெல்லைக்கு போய்விட முடியும். ஆனால் தென்மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் தாம்பரத்தை சுற்றிள்ள பகுதிகளில் தான் இருக்கிறார்கள். செங்கல்பட்டு முதல் தாம்பரம், பல்லாவரம், குராம்பேட்டை, துரைப்பாக்கம், திருவான்மியூர், மகாபலிபுரம் கிட்டத்தட்ட 60 கிமீ தூரம் வரை உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள்.எனவே கண்டிப்பாக வந்தே பாரத் ரயில் தாம்பரத்தில் நின்று தான் செல்ல வேண்டும் என்று தாம்பரம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாம்பரத்தில் நிற்காமல் சென்று வந்த தேஜஸ் ரயில் பல மாதங்கள் காலியாகவே சென்று வந்தது, அதன்பின்னர் தாம்பரத்தில் நிற்கும் என்று அறிவித்த பின்னரே, அந்த ரயிலுக்கு வரவேற்பு கிடைத்தது. இதனை சுட்டிக்காட்டும் மக்கள், தென் மாவட்ட மக்களின் நலன் கருதி, தாம்பரத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த தெற்கு ரயில்வே உத்தரவிட வேண்டும் என்று சென்னை மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒரே நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதி மக்கள் எழும்பூர் சென்று ஏறுவது சிரமம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் நெல்லை வந்தே பாரத் ரயில் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளார்கள். கோவில்பட்டியில் நிறுத்தினால் தான் தூத்துக்குடி மற்றும் அந்த மாவட்ட மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றும், நெல்லை வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications