திமுக தலைமையிடம் உருகிய மூத்த மாவட்டச் செயலாளர்! காத்திருந்து காத்திருந்து கடுப்பான மாஜி எம்.எல்.ஏ!
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு ஆவுடையப்பனை எதிர்த்து தங்கபாண்டியன் கோதாவில் குதித்த நிலையில் கட்சித் தலைமையிடம் உருகி மீண்டும் தனது மாவட்டச் செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொண்டாராம் ஆவுடையப்பன்.
வாக்குப்பெட்டி மட்டும் வைக்கப்பட்டிருந்தால் நெல்லை கிழக்கு மாவட்ட திமுகவில் பெரிய மாறுதல்கள் நடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா தரப்பு கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.

நெல்லை மாவட்டம்
நெல்லையிலிருந்து வரும் தொல்லைக்கு எல்லையே இல்லை என்கிற வகையில், அம்மாவட்ட திமுகவிலிருந்து வரும் புகார்களால் அறிவாலய நிர்வாகிகளே அயர்ந்து போய் உள்ளார்கள். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி புகார் ஓலைகள் அனுப்பும் நடைமுறை மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கு பிறகும் தொடர்கின்றன. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், கட்சித் தலைமையிடம் உருகி மீண்டும் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார் ஆவுடையப்பன்.

வாக்குப்பெட்டி
வாக்குப்பெட்டி மட்டும் வைக்கப்பட்டிருந்தல் தங்கபாண்டியன் வெற்றி பெற்றிருப்பார் என்கிறார்கள் நெல்லை கிழக்கு மாவட்ட திமுகவினர். தனது வயதையும், சீனியாரிட்டியையும் முதல்வரிடம் கிடைத்த நேரத்தில் பதமாக எடுத்துக் கூறி அவரது முடிவை பரிசீலனை செய்ய வைத்தாராம் ஆவுடையப்பன். இதனிடையே நெல்லை மத்திய மாவட்ட திமுகவிலும் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்புக்கு எதிராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா டீம் கடுமையாக போராடியது.

மாலை ராஜா
கடைசியில் மேலிட லாபி மூலம் மீண்டும் அப்துல் வஹாப்பே நெல்லை மத்திய மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ. சீட், மேயர் சீட், மாநகரச் செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி என வரிசையாக கடந்த 2 ஆண்டுகளாக காத்திருந்தும் கடைசியில் எதுவும் நடக்காததால் மாலைராஜா கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதற்காக இவர் கணக்கு வழக்கின்றி செலவும் செய்ததாக தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

அப்பாவு தரப்பு
சபாநாயகர் அப்பாவு நெல்லை மாவட்டத்தில் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும் அவரது ஆதரவாளர்கள் இந்த முறை ஆவுடையப்பனுக்கு கடும் டஃப் கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிந்த பிறகும் அது தொடர்பான களேபரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications