அன்று கருணாநிதி பற்றி ஏச்சு! இன்று ஸ்டாலினை பாராட்டி பேச்சு! நெல்லை கண்ணன் பிளாஷ்பேக்!
சென்னை: கருணாநிதியை ஒரு காலத்தில் ஊர் ஊராக தூற்றிப் பேசிய நெல்லை கண்ணன் இன்று அவரையும் அவரது மகன் ஸ்டாலினையும் மேடையெங்கும் போற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்.
இதற்கு சமீபத்திய உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் நெல்லை கண்ணன் உரையை குறிப்பிடலாம்.
முதலமைச்சர் ஸ்டாலினிடம், உங்கள் விழிவட்டப் பார்வையில் என்னை வைத்துக்கொள்ளுங்கள் என கண்ணீருடன் அவர் முன் வைத்த கோரிக்கை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நெல்லை கண்ணன்
தமிழ்க்கடல் என்றழைக்கப்படும் நெல்லை கண்ணன் காமராஜரின் தீவிர விசுவாசியாக காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து செயல்பட்டவர். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து அரசியலில் ஒரு காலத்தில் கோலோச்சியவர். மேலும், கருணாநிதி எதிர்ப்பு கொள்கையுடன் ஊர் ஊராக அவருக்கு எதிராக பேசி வந்தவர் நெல்லை கண்ணன்.

2005-ல் பேச்சு
கருணாநிதியை விமர்சித்து பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் தொடர் கட்டுரையே எழுதியவர் இவர். இதுமட்டுமல்லாமல் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அவர் மீது எல்லோரும் பரிவு காட்டிய நிலையில், கைது நடவடிக்கையின் போது கருணாநிதி எழுப்பிய சப்தத்தையும், கூக்குரலையும் கிண்டல் செய்து ஈரோடு புத்தக திருவிழாவில் பேசியவர் நெல்லை கண்ணன். இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக கருணாநிதியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் அவர்.

ஸ்டாலினுக்கு பாராட்டு
இப்படி திமுகவையும், கருணாநிதியையும் பற்றி தூற்றிய அதே நெல்லை கண்ணன், அண்மைக்காலமாக ஸ்டாலினையும், திமுகவையும் போற்றி வருவது கவனிக்கத்தக்கது. நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற விசிக விருதுகள் வழங்கும் விழாவில், ஒளிவுமறைவின்றி நேரடியாகவே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை முன் வைத்து பேசுப்பொருளாக மாறியிருக்கிறார் நெல்லை கண்ணன். அரசியலில் அநாதைகளை நம்பி தாமும் அநாதையாகி விட்டதாக காங்கிரஸ் கட்சி குறித்து சூசகமான முறையில் சாடியிருக்கிறார் அவர்.

ஆள் இல்லை
எந்த நெல்லை கண்ணன் திமுக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என ஒரு காலத்தில் பேசினாரோ, அதே நெல்ல கண்ணன் உங்களை விட்டால் இந்த தலைமுறைக்கு ஆள் இல்லை, இரண்டாம் விடுதலை வாங்கிக் கொடுத்த சிங்கம் என ஸ்டாலினை பாராட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார். இந்த நிகழ்வை காணும் போது, காலச்சக்கரம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எந்தக் கட்சி ஆட்சி அமைத்துவிடக் கூடாது பேசினாரோ, யார் முதலமைச்சராக வந்துவிடக் கூடாது என செயல்பட்டாரோ, இன்று அவரே இந்தக் கட்சியின் ஆட்சி தான் வேண்டும் என திமுகவை பாராட்டும் சூழலை உருவாக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications