முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ஆசை நிறைவேறவே இல்லை.. நெல்லை கண்ணனின் உருக்கமான பதிவு.. பிளாஷ்பேக்!
சென்னை: ஸ்டாலினுடன் பேச விடவில்லை, இறந்து போக நினைக்கிறேன் என முகநூலில் நெல்லை கண்ணன் பதிவு செய்திருந்த நிலையில் அவர் கடைசி வரை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாமல் போய்விட்டது.
Recommended Video
தமிழ்க் கடல் என அழைக்கப்படுபவர் இலக்கியவாதி நெல்லை கண்ணன். இவர் பட்டிமன்ற பேச்சாளர். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். ஆரம்பக் காலத்தில் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை கொண்டவராக இருந்தார் நெல்லை கண்ணன்.
கருணாநிதிக்கு எதிராக பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளார் நெல்லை கண்ணன். 1996 ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் அன்றைய திமுக தலைவர் மு கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினையும் திமுகவையும் பாராட்டி பேசி வந்தார்.
Flash Back: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கண்ணீர் வடித்த நெல்லை கண்ணனின் உருக்கமான பேச்சு!
நெல்லை கண்ணன்
இந்த நிலையில் நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருந்ததாவது: வேறு வழியில்லை எழுத வேண்டியிருக்கின்றது. மிகச் சிறப்பான முதல்வர் என உலகம் போற்றுகின்றது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
விருது வழங்கும் விழாவில்
விருது வழங்கும் விழாவில் என்னை தானே பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து என்னிடம் காட்டிய தாயுள்ளத்தை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, ‘இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது' என்றார். இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார்.
79 வயது கிழவன்
இன்று ஒரு கடிதத்திற்கும் கூட விடை இல்லை. நேரில் பேச அனுமதிக்கவில்லை. 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார். இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகிறேன். மரணம் தானே உறுதி" என்று குறிப்பிட்டிருந்தார்.
கடைசி வரை நிறைவேறாத ஆசை
இந்த பதிவு திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நெல்லை கண்ணன் வயோதிக பிரச்சினையால் இறந்ததன் மூலம் அவர் கடைசி வரை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாமல் சென்றுவிட்டார்.