"நெல்லை முபாரக்" திடீர் அறிவிப்பு.. வன்னியரசு ரியாக்ஷன்.. திரண்டு வந்து வாழ்த்திய "சிறுத்தைகள்"..!
நெல்லை முபாரக் விசிக வன்னியரசுக்கு விருது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவுக்கு இந்த ஆண்டுக்கான பழனிபாபா விருது வழங்கப்படும் என்று எஸ்பிஐ கட்சி அறிவித்துள்ளது.
பழனி பாபா - மிகச்சிறந்த முஸ்லிம் செயற்பாட்டாளர்.. தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் முன்னோடி.. தனிப்பட்ட செல்வாக்காலும், அதிர வைக்கும் பேச்சாலும், இஸ்லாமிய மக்களை ஒன்றுதிரட்டியவர்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்.. இந்திரா காந்தியின் பாராட்டையும், அபிமானத்தையும் பெற்றவர்.

முபாரக்
இவரது ஒவ்வொரு மேடைப்பேச்சும் இஸ்லாமிய மக்களுக்கு உந்துதலையும், ஊக்க சக்தியையும் தந்து வருகிறது.. அதனாலேயே இந்த தலைவர் இன்றும் மறக்கப்படாமல், அந்த சமூக மக்களால், போற்றப்பட்டு வருகிறார்.. அந்த வகையில், எஸ்டிபிஐ கட்சியானது, வருடந்தோறும் சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் உரியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பழனிபாபா பெயரில் விருது வழங்கி வருகிறது.. அந்த அடிப்படையில் 2021ம் ஆண்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணனுக்கு பழனிபாபா விருது வழங்கப்பட்டது.

நெல்லை முபாரக்
இப்போது இந்த வருடமும் அந்த விருதை வழங்க தயாராகி உள்ளது.. இது தொடர்பாக, எஸ்பிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "வன்னியரசு அவர்களுக்கு வணக்கம்.. இந்த கடிதம் தங்களை சீரிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக என பிரார்த்தித்தவனாக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்தில், ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறோம்.

பழனிபாபா விருது
இறைவன் நாடினால் இந்த ஆண்டு சிறந்த ஆளுமைகளுக்கான விருது வழங்கி கவுரவிக்க விழா எதிர்வரும் ஜூலை 2ம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பழனிபாபா விருது 2022 ஐ பாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்புக் களத்தில் தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுத்துவரும் தங்களுக்கு வழங்க எங்களது விருது கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது.

நெல்லை முபாரக்
தங்களுக்கு இந்த விருதினை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆகவே தாங்கள் இந்த விருதினை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்புமையை வழங்கி விருதினைப் பெற்று சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று நெல்லை முபாரக் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, வன்னியரசும் இதுகுறித்து ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்..

வாழ்த்துக்கள்
அதில், ஒவ்வொரு ஆண்டும் எஸ்டிபிஐ சார்பில் வழங்கப்படும் விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கான #பழனிபாபா விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. SDPI கட்சிக்கு நன்றிகள் பல. சமூகநீதிக்கான களத்தில் இசுலாமியர்-தலித்களின் விடுதலைக்காக போராடிய போராளி பழனிபாபா அவர்களின் பங்கு மகத்தானது" என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்டுக்கு சிறுத்தைகள் பலரும் திரண்டு வந்து, வன்னியரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications