நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்பி ராபர்ட் புரூஸின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அது போல் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ்ஸும், விருதுநகரில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி சுயேச்சை வேட்பாளரான முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்; திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்; விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுக்களில், தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, 45 நாட்கள் அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மூவரும் ஒரே நாளில் நேரில் வந்து தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications