இன்று இரவு ஸ்பெஷல் ரயில்.. சென்னை திரும்பும் தென் மாவட்ட மக்களுக்கு செம நியூஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக ராஜபாளையம், தென்காசி வழியாக சென்னை தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஏப்ரல் 18 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்று சேர்ந்தது.

வாக்களித்துவிட்டு பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் ஏப்ரல் 19 அன்று திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் சென்று சேர்ந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடந்த நிலையில், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கூடுதலாக விடுமுறை கிடைத்ததால் பலர் விடுமுறை முடிந்து இன்று இரவு சென்னை திரும்ப உள்ளனர். இன்று இரவு சென்னை திரும்பும் பயணிகளுக்கு வசதியாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இன்று இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 10.15க்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாளை பகல் 12.45க்கு புறப்படும் ரயில் நாளை நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
நெல்லையில் இருந்து கிளம்பும் இந்தச் சிறப்பு ரயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று காலை 10.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.












Click it and Unblock the Notifications