நெல்லை டூ எழும்பூர் ஸ்பெஷல் ரயில்.. புறப்படும் நேரத்தில் திடீர் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க
சென்னை: நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் இன்று மாலை 6.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 2.45 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது.. சுற்றுலா செல்வது, பயணம் செய்வது அதிகரித்துள்ளது. இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக ரயில்வேக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் தெற்கு ரயில்வே மூலமாக இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் இந்த மாதம் முழுவதுமே டிக்கெட் இல்லை.
இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இன்னும் சொல்லப்போனால் தேர்தல் சமயத்தில் தான் பல ரயில்களில் முன்பதிவு பெட்டியில் கூட ஓபன் டிக்கெட் எடுத்து பயணிகள் பயணித்ததை காண முடிந்தது. இந்த நிலையில், தான் கோடையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அந்த வகையில் கோடையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு (வண்டி எண்: 06070) என்ற சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்து இருந்தது. இந்த ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இணைப்பு ரயில் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த ரயில் புறப்படும் நேரம் 2.45 மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. இதன்படி நெல்லையில் இருந்து 21.30 (இரவு 9.30) மணிக்கு இந்த ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சந்திப்பு, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று சென்னை எழும்பூரை சென்றடையும்.












Click it and Unblock the Notifications