சூரியக் கதிர்களை போல நேதாஜியின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளது - மு.க ஸ்டாலின் புகழாரம்
சென்னை: இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். சூரியக் கதிர்களை போல அவர் புகழ் நாடெங்கும் பரவியுள்ளது; அவர் காட்டிய ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்கள் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க ஐஎன்ஏ என்ற படையையே உருவாக்கி எதிர் தரப்பினரை அச்சம் அடையச் செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி சிங்கப்பூரிலிருந்த போதே இந்தியாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தினார்.

உங்களின் இரத்தத்தைக் கொடுங்கள், நான் சுதந்திரத்தைத் தருகிறேன்" என்ற நேதாஜியின் வீர முழக்கம், இளைஞர்கள் உணர்வு நரம்புகளை தட்டியெழுப்பியது. ஜெய்ஹிந்த் என்று அவர் முன்னெடுத்த அந்த முழக்கம் தான் இந்தியாவில் பலருக்கும் விடுதலை வேட்கை ஏற்படக் காரணமாகி இருந்தது.
நேதாஜியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் அங்கீகாரம் கொடுத்ததில் தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடி என்று சொல்ல வேண்டும். இன்றிலிருந்து சரியாக 25 வருடத்திற்கு முன்னரே நேதாஜி என்னும் ஒப்பற்ற வீரனுக்குச் சென்னை கடற்கரை சாலையில் சிலை வைத்தார் அப்போதய முதல்வர் மு.க கருணாநிதி. 15.12.1997 ஆம் வருடம் நேதாஜியின் நூற்றாண்டு விழாவின் போது சென்னை கடற்கரையில் அவரது சிலை தமிழ்நாடு அரசால் திறந்துவைக்கப்பட்டது.
நேதாஜியின் பிறந்த நாளையொட்டி அவரது தியாகத்தைப் போற்றும் விதமாக சமூகவலைத்தளங்களில் அவரைப் போற்றி வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சூரியக் கதிர்களை போல அவர் புகழ் நாடெங்கும் பரவியுள்ளது. அவர் காட்டிய ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications