அன்று இரவு 12 மணி; இன்று 2 மணி! ஒரே டெம்ப்ளேட் பேச்சு! பாஜக Vs சரத்குமார்!
சென்னை: பாஜக பற்றிக் கடந்த காலங்களில் சரத்குமார் முன்வைத்த விமர்சனங்களை முன்வைத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் சரத்குமார் தான் நடத்தி வந்த அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் நேற்று அதிரடியாக இணைத்தார்.

அவரது கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பற்றிய விவாதங்கள் நடந்து வந்த வேளையில், திடீரென்று கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமாக விட்டார் அவர்.
கட்சியை பாஜகவுடன் இணைப்பது பற்றி இரவு 2 மணிக்கு மனைவி ராதிகாவுடன் ஆலோசித்ததாகவும், அவர் அதற்குச் சம்மதம் அளித்ததாகவும் சரத்குமார் விளக்கம் அளித்திருந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க சரத்குமார் முயற்சி எடுத்தார். ஆனால், அவருக்கு அதிமுக மற்றும் திமுகவிடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.
ஆகவே வெறுப்பான சரத்குமார், 'நாம் கடைசி வரை காத்திருந்தோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்கவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் நம்மை மதிக்கவில்லை' என்று தொண்டர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டுப் பேசி இருந்தார்.

அதன்பின்னர், இரவு 12 மணிக்கு கமல்ஹாசன் மநீம அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், கொள்கை ரீதியாக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளோம் என்றும் சரத்குமார் அறிவித்தார்.
அரசியலில் கமல்ஹாசனைவிட சரத்குமார் சீனியர். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகக் கட்சி நடத்தி வந்த சரத்குமார், கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளைக் கூட தாண்டாத கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துத் தேர்தலைச் சந்தித்தார்.
அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா எனச் செய்தியாளர்கள் அவரை தொடர்ந்து கேட்டு வந்தனர். அப்போது அவர், ""பாஜக கட்டாயம் ஆதரிக்கமாட்டோம். பாஜக பல திட்டங்களை அறிவித்தார்கள்.

ஆனால், அதைச் சிறப்பாகச் செயல்படுத்தவில்லை. 'ஆபரேஷன் சக்சஸ். ஆனால் ஃபேஷண்ட் மரணம்' என்பது போல் உள்ளது பாஜகவின் செயல்பாடு.
ஆகவே பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம்" என்று கூறியிருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் வேல் யாத்திரை நடத்தினார். அப்போது சரத்குமார் அது பற்றி, "வேலை கண்ணால் பார்க்காதவர்கள் எல்லாம் வேலை கையில் எடுக்கிறார்கள். அதுதான் ஆச்சரியமாக உள்ளது. அதுவும் வெள்ளி வேல் எடுத்துச் சுற்றுகிறார்கள். நாட்டில் ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.

அதன்பின்னர் மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்து வந்தார் பாமக அன்புமணி ராமதாஸ். அதற்குப் பதிலடியாகப் பொன் ராதாகிருஷ்ணன் பல விமர்சனங்களை அன்புமணி மீது வைத்தார். இறுதியில் பாஜக கூட்டணிக்குள் பாமக அன்புமணி ராமதாஸ் சென்றார்.
இந்தக் கூட்டணி குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இது தொடர்பாக மார்ச் 2, 2019 அன்று தூத்துக்குடி விமானநிலையத்தில் பேசிய சரத்குமார், "சோஷியல் மீடியா முழுக்க பாமக அன்புமணி ராமதாஸ் அன்று என்ன சொன்னார்? இன்று என்ன சொன்னார்? பொன் ராதாகிருஷ்ணன் அன்று என்ன சொன்னார்? இன்று என்ன சொல்லி இருக்கிறார்?

ஒரு நிலைப்பாடு எடுத்தால் அது நியாயமாக இருக்க வேண்டும். ஒருநாள் கீழ்த்தரமான முறையில் பாஜகவை விமர்சித்துவிட்டு, அவர்களின் அருகிலேயே போய் எப்படி உட்கார முடிகிறதோ? நான் போய் அப்படி உட்கார மாட்டேன்" என்று கூறி இருந்தார்.
ஆனால், இன்று சரத்குமார் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். பாமக அடித்த அதே பல்டியை இப்போது சரத்குமாரும் அடித்துள்ளார்.
கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் இணையும் விழா நேற்று நடந்தது. அப்போது சரத்குமார், " மோடிஜியுடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன? என்று என் மனதில் தோன்றியது. சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த மோடிஜி நாட்டின் பிரதமராக வளர்ந்து வந்துள்ளார். ஆகவே, அது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடுமையான உழைப்பு, உறுதி, நேர்மை. இவைதான் அவரது வளர்ச்சிக்குக் காரணம்.

மனைவி ராதிகாவிடம் இரவு 2 மணிக்குக் கேட்டுவிட்டுத் தான், கட்சியை பாஜகவுடன் இணைந்தேன் என்று சரத்குமார் தெரிவித்திருந்தார். அதற்குத் தனது மனைவி, 'நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் உடன் இருப்பேன்' என்று கூறியதாகவும் அவர் பேசி இருந்தார்.
ஆனால், இவரது மனைவி ராதிகா சரத்குமார், கடந்த ஏப்ரல் 2, 2021 அன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அன்று பாஜகவைப் பற்றிப் பேசிய கருத்துகள் என்ன தெரியுமா?
"தமிழ்நாட்டில் பாஜகவுக்குப் பெரிய பலம் இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை. அப்படித்தான் நான் நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இப்படி மனைவியும் கணவரும் ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்திருப்பது பற்றி சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications