வண்டலூர் டூ மீஞ்சூர்.. சென்னையில் அவுட்டர் ரிங் ரோடு சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம்.. விவரம்
சென்னை: சென்னையில் அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் வருகிற 1-ந்தேதி முதல் புதிய கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுதவிர தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 40 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதேபோல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர் முதல் திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலும், மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையிலும் வாகனங்கள் கடந்து செல்ல புதிய கட்டணத்தை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதியில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை செலுத்த வேண்டிய புதிய கட்டணங்களை விவரமாக பார்ப்போம்.
வண்டலூர்- மீஞ்சூர் வரை கார். ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.140 கட்டணம் செலுத்த வேண்டும். இலகுரக வணிக வாகனங்களுக்கு ரூ.225 கட்டணமாக செலுத்த வேண்டும். லாரி, பஸ்கள் ரூ.470 மற்றும் 3 அச்சு வணிக வாகனங்களுக்கும் ரூ.510 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் 4 முதல் 6 அச்சு கனரக கட்டுமான வாகனங்களுக்கு ரூ.735 மற்றும் 7 முதல் அதற்கு மேல் அச்சு உள்ள வாகனங்கள் ரூ.895 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதேநேரம் நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20. இலகுரக வணிக வாகனம் ரூ.40. லாரி, பஸ்கள் ரூ.85, 3 அச்சு கனரக வாகனங்களுக்கு ரூ.90. ரூ.130, ரூ.160 புதிய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடியநல்லூர்- மீஞ்சூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.15, லாரி, பஸ்கள் ரூ.75, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.80, ரூ.115, ரூ.140 என புதிய சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அனுமதிக்கப்பட்ட சுமையின் எடைக்கு அதிகமாக சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து 10 மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.கட்டணம் குறித்த முழு விவரங்களில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் பாருங்கள்..












Click it and Unblock the Notifications