பெரியாரை ராஸ்கல் என விமர்சித்த மாஜி நீதிபதி கட்ஜூ... இடைவிடாமல் பொளந்து கட்டிய நெட்டிசன்ஸ்
சென்னை: தந்தை பெரியாரை ராஸ்கல் என விமர்சித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜை அவரது சமூக வலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சித்து தள்ளிவிட்டனர்.
மார்க்கண்டே கட்ஜூ தமது ஃபேஸ்புக் பக்கத்தில், 1990களில் நகைமுகனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த திராவிடன் என்ற ஏட்டின் முகப்பு பக்கத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஆகஸ்ட் 15 நமக்கு துக்க தினம்- தந்தை பெரியார் என எழுதப்பட்டும் இருந்தது.

கட்ஜூ காட்டம்
இதனை வைத்து தந்தை பெரியாரை பிரிட்டிஷ் ஏஜெண்ட், துரோகி, ராஸ்கல் என ஏக வசனத்தில் விமர்சித்திருந்தார் கட்ஜூ. இந்த விமர்சனத்தை பல பெரியார் எதிர்ப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். அதைவிட பெரியார் ஆதரவாளர்கள் மிக கடுமையாக கட்ஜை விமர்சித்திருக்கின்றனர்.

முன்னாள் நீதிபதியே இப்படியா?
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக பணியாற்றிய ஒருவர் இப்படியாக பொதுவெளியில் தமிழகத்தின் போற்றுதலுக்குரிய தந்தை பெரியாரை எப்படி விமர்சிக்கலாம் என்பது பலரது கொந்தளிப்பாகும். மேலும் பலர் முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.. 1957-ல் தந்தை பெரியார்தான் இந்திய அரசியல் சட்டத்தையே முதலில் எரித்தவர். அவர் ஏன் எரித்தார் என்பதற்கு வரலாற்று பக்கங்களை படியுங்கள் என அட்வைஸ் செய்திருக்கின்றனர்.

சாதிய சிந்தனைதான்...
தந்தை பெரியார் மரணித்து 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் பார்ப்பனியத்தை குலைநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதாகவும் ஒரு பதிவு பதிலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. Punithan T A என்பவர் பெரியாரை கேவலமாக திட்டுவதன் மூலம் தங்களைத் தரந்தாழ்த்திக் கொண்டீர்கள்! எதிர்மறையாகப் பேசுவதுதான் அவர் வழக்கம்! அதன் காரணத்தைப் புரிந்துகொண்டால், விளங்கும்! ஆங்கிலேயர் காலத்தில்தான், இந்துமதத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை ஓரளவுக்கேனும் தடுக்க முடிந்தது! அனைவருக்கும் கல்வி கிடைக்க வழியேற்பட்டது! உடன்கட்டையேறும் சதி தடுக்கப்பட்டது! பிராமணீயத்தின், வர்ணாசிரத்தின் கொடூரங்களை அனுபவித்திருந்தால்தான் அவை புரியும்!விடுதலை பெற்றும், தமிழன் வடவனுக்கு அடிமையாகிப்போகும் நிலை இன்றிருக்கிறதே! இதையுணர்ந்துதான் பெரியார் அங்ஙனம் கூறினார்.சீர்தூக்கிப் பார்க்காமல் எழுதுவது, தங்களது சாதியத்தையே உணர்த்துகிறது என்கிறார்.

46 வருஷத்துக்கு அப்புறமும் பயம்?
ஷாஹூல்ஹமீத் அப்துல்ஹூதா என்பவர், படித்தவர்கள் வேறு அறிவாளிகள் வேறு என அன்றே எங்களுக்கு அவர் தெளிவாக புரிய வைத்துள்ளார். நாங்கள் பரப்புவதைவிட தங்களை போன்றவர்கள் பரப்புவது இன்னும் அவருக்கு சிறப்பு என சுட்டிக்காட்டியிருக்கிறார். Kannan Sivakumar என்பவர், பெரியார் மறைந்து 46 ஆண்டுகளாகிவிட்டன... இன்னமும் அவரை கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள். அவரது பகுத்தறிவு கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் என்கிறார். இந்த விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.












Click it and Unblock the Notifications