இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ்நாட்டை தனித்துவமான நாடாக்குவோம்: விசிக வன்னி அரசு பேச்சு- பாஜக டென்ஷன்!
சென்னை: இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாட்டை தனித்துவமான நாடாக்குவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை வலியுறுத்தி 11 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்குளித்து மாண்டவர் இளம்பெண் செங்கொடி. செங்கொடியின் 11-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசியதாவது: பேரறிவாளன் முழுமையாக விடுதலையாகிவிட்டார். நளினி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல ரவிச்சந்திரனும் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த விடுதலைக்குப் பிறகு எஞ்சியவர்களும் வழக்கு தொடருவார்கள்.

புலிகளின் நிழலாக மக்கள் மன்றம்
விடுதலைப் புலிகளின் நிழலாக மக்கள் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் செங்கொடி நினைவு நாளை நடத்தி வருகிறது. சனாதனத்தை நிலை நிறுத்த, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தை இன்று அழித்தொழிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த அநீதியான சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டிய பொறுப்பும் தேவையும் நிறைய இருக்கிறது. கிராமம் கிராமமாக நாம் செல வேண்டிய தேவை இருக்கிறது. சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்; ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்று திருமாவளவன் தமது பிறந்த நாள் செய்தியாக தெரிவித்தார்.

கிராமங்கள் நோக்கி
ஓராண்டு காலம் நாங்கள் சனாதன சக்திகளுக்கு எதிராக கிராமம் கிராமமாக செல்கிறோம்; தந்தை பெரியார், அம்பேத்கர் கருத்தியலோடு கிராமங்களுக்கு செல்கிறோம். சனாதன சக்திகளுக்கு எதிராக களமாடுவதில் எங்கள் உயிரே போனாலும் கவலைப்படமாட்டோம். சனாதன சக்திகளை வீழ்த்துவது, தமிழ்நாட்டை முழுமையான தமிழ்நாடாக மாற்றுவது என்கிற அடிப்படையில்தான் விடுதலை சிறுத்தைகள் களமாடுகிறோம்.

தமிழ்நாடு தனித்துவமான நாடு
செங்கொடியின் இந்த நினைவுநாளில் விடுதலை- தமிழ்நாடுடைய முழுமையான விடுதலை, தமிழ்- தமிழருடைய உரிமை, இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு என்பது ஒரு தனித்துவமான நாடு என்பதை அடைவது என்பதுதான் செங்கொடிக்கு நாம் செலுத்தக் கூடிய கடமை. இவ்வாறு வன்னி அரசு கூறினார்.

பாஜக எதிர்ப்பு
ஆனால் வன்னி அரசுவின் இந்தப் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வன்னி அரசுவின் இந்த பேச்சை தமது ட்விட்டர் பகிர்ந்து கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications