பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிறப்பு வார்டில் ஐந்து பேரும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உருமாற்றம் பெற்ற கொரோனாவா? என்பதை கண்டறிய சளி மாதிரிகள் பூனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிரிட்டனில் கொரோனா வைரஸின் மரபணு உருமாறி புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய கொரோனா வைரஸை ஒப்பிடும்போது புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் 70 சதவிகிதம் வரை அதிவேகமாக பரவி வருகிறது.
தென்கிழக்கு பிரிட்டன் பகுதியான கென்ட்டில் முதல்முறையாக புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வைரஸ் கென்ட் கொரோனா வைரஸ் என அழைக்கப்படுகிறது.
பிரிட்டனில் தீவிரமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் வைரஸின் தன்மையைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உருமாறிய கொரோனா பரவி வருவதால் இங்கிலாந்தில் இருந்து வரும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நாடு திரும்பி அனைவரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏற்கனவே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரை கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொரோனா முடிவுகள் இருந்தால் மட்டுமே அனுமதி.... விமான நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவு
இந்நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இதுவரை இங்கிலாந்தில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். அனைவரும் தனி தனி வார்டுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உருமாற்றம் பெற்ற கொரோனாவா என்பதை கண்டறிவதற்காக, தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உருமாற்றம் செய்யப்பட்ட கொரோனா பரவுகிறது என்று யாரும் அச்சப்படவோ பதற்றமடையவோ தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.