தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாகிறதா? குடியரசு தின விழாவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
சென்னை: தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களான சேலம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவில் புதிய மாவட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் வெளியாகவில்லை..
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் இருக்கின்றன. பெரிய மாவட்டங்களை எல்லாம் பிரித்து சிறிய சிறிய மாவட்டங்களாக அறிவித்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற கோரிக்கை உள்ளது. இதனிடையே 32 மாவட்டங்களாக தமிழ்நாடு நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

அதாவது நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37) என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு அதே அதிமுக ஆட்சி காலத்தில் 2020ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் தனி மாவட்டம் கோரி அரசிடம் மனுக்கள் அளித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனி தனி மாவட்டமாகவும், கோவை மற்றும் திருப்பூரை பிரித்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அது போல் தஞ்சையை பொறுத்தவரை இரண்டாக பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள் ளிட்டோர் நகரங்களை கொண்டு புதியதொரு மாவட்டம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இதேபோல் திருவள்ளூரை பிரித்து பொன்னேரி மாவட்டமாக்கவும் கோரிக்கை எழுந்திருக்கிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்றும். திருவண்ணாமலையை பிரித்து ஆரணியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதேபோல் தூத்துக்குடியை பிரித்த கோவில்பட்டியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.இந்நிலையில் குடியரசு தின விழாவில் புதிய மாவட்டங்கள் குறித்து அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications