ஆஹா.. மொத்தமாக கிளம்பிருச்சே.. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை வைத்து செய்து வரும் நிலையில், வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் 16-ம் தேதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு தினங்களாக மழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானால் இன்னும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்காவது தமிழகத்தில் கனமழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.
மேலும், புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெளிய தெளிய அடிக்கும் மழை..
இந்த ஆண்டு என்னவோ மழைக்கு தமிழகத்தை மிகவும் பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. நினைக்கும் போதெல்லாம் அடித்து நொறுக்கி வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தொடங்கி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்ந்து 'தரமான சம்பவம்' செய்து வருகிறது.

கரையை கடக்கும்..
இதனிடையே, தற்போது உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மையமாக இன்று அதிகாலை வலுவடைந்தது. இதன் தாக்கமாக, நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடையாது என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையே நாளை அதிகாலை கரையை கடக்கவுள்ளது. அதன் பின்னர், அரபிக் கடலை நோக்கி இது நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, 13-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் அந்தப் பகுதியில் தென்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது புயலாக வலுப்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.

அடுத்த கனமழை ரெடி..
ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால், இன்னும் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது புயலாக வலுப்பெற்றால் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications