பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? இன்று முதல் நில வழிகாட்டி அமல்! விக்கிரவாண்டிக்கு மட்டும் விதிவிலக்கு
சென்னை: புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் விக்கிரவாண்டி நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் அமலுக்கு வந்தது. சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தை குறைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம், பதிவு கட்டணத்தை ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் அதை சரிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் துணைக் குழுக்களை தமிழக அரசு அமைத்தது.
இந்த குழுவினர் தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர். அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால், அதை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஆனால் புதிதாக மதிப்பு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த ஜூன் 10 ஆம் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் கருத்துகள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் ஆய்வு செய்தன.
அதில் தகுதியானவை ஏற்றுக் கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன. இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் கடந்த 29ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இ்த புதிய வழிகாட்டி மதிப்பை பொருத்தமட்டில் கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரிக்கும் குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன.
இதனால் அந்த இணையதளம் https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கெனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தால் அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைந்திருந்தால் அந்த தொகை திருப்பி அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications