தென் தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மெமு ரயில் சேவை மதுரையில்? இதை மட்டும் கண்டிப்பா செய்யணும்!
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களுக்கும் மெமோ ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் சோதனை அடிப்படையில் மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எனப்படும் மெமு ரயில் மதுரைக்கு வந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..
சென்னையைப் பொறுத்தவரையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் போக்குவரத்து எளிதாகவும் இருக்கிறது. பலரும் நகர்பகுதிகளுக்கு வந்து செல்வது சுலபமாகி விடுகிறது.

இதன் அடிப்படையில், மதுரையை அடிப்படையாக கொண்டு திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை என இயக்கப்பட்டால், இந்த நகரங்களுக்கு இடையிலான கிராமங்கள் பெருமளவில் பயனடைவதுடன், பஸ் போக்குவரத்தைவிட மிகக் குறைந்த செலவில் தங்களது பயணத்தை பொதுமக்கள் பெற முடியும்.
தற்போது பகல் நேர ரயில் சேவை இருந்தாலும், தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் இல்லை. தென் மாவட்டங்களின் நுழைவாயிலாக மதுரை உள்ளது. அதுமட்டுமன்றி, காய்கறியிலிருந்து பல்வேறு வகையான சந்தைகளுக்கு முக்கியமான இடமாகவும். சிறு, குறு மற்றும் பெருந்தொழில்களுக்கான நகரமாகவும் உள்ளது. அதேபோல், முருகனின் அறுபடை வீடுகளில் 4 படை வீடுகள் தென்மாவட்டங்களில் வருகின்றன.
அதேபோல், கேரளாவின் சபரிமலைக்கு செல்வோர் தேனி வழியை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். முருகன், ஐயப்பன் சீசன்களில் இப்பகுதிகளில் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதல் சேவை தேவை என்பதை உணர்த்தும். சிவகாசியைப் பொறுத்தவரை பட்டாசு, அச்சுத்தொழில்; குறிப்பாக, இந்தியா முழுவதும் இங்கிருந்துதான் காலண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராஜபாளையம் முழுவதும் நூற்பாலைகள், பஞ்சாலைகள் நிறைய உள்ளன.
தென்காசியில் மரத்தொழில்கள், சாத்தூர், கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலைகள், கடலை மிட்டாய் போன்ற சிற்றுண்டி வகைகள் இங்கு உள்ளன. அதேபோன்று தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. இதுபோன்ற மின்சார ரயில் சேவையால் சாமானியர்களின் பணம், நேரத்தை மிச்சமாகும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் மதுரை கோட்டத்தில் மெமோ ரயில் சேவையை துவக்க வேண்டுமென மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணாவை சந்தித்து அகில பாரதிய கிரக பஞ்சாயத்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் மனு அளித்தனர். இதை அடுத்து தற்போது சோதனை அடிப்படையில் மதுரையில் மெமு ரயில் இயக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெரிசலை கருத்தில் கொண்டு நவம்பர் மூன்றாம் தேதி 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
அந்த ரயில் அரக்கோணம் சேலம் இடையே இயக்கப்பட்ட நிலையில் சென்னை மதுரை இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது . இந்த நிலையில் தற்போது இந்த ரயில் சேவையை சென்னை - தாம்பரம் - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் - மதுரை வழியாகவும், மதுரையில் இருந்து தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களுக்கும் இயக்க வேண்டும் எனவும், குறைந்த தூர ரயில்களைப் போல மெமு ரயில்களையும், மின்சார ரயில்களையும் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது, தற்போது சோதனை அடிப்படையில் மெமு ரயில் இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications