Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?
சென்னை: தமிழக அரசியலில் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், நாளை நண்பகல் 12 மணிக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை சந்தித்து தனது கருத்துகளையும், முடிவையும் பகிர உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பாஜகவில் தொடர்வாரா அல்லது புதிய கட்சியை தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறார் என்றும், முதலில் புதிய இயக்கம் தொடங்குகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் அமைந்தது. டெல்லி செல்வதற்கு முன்பு கூட தனது காரில் இருந்த கட்சி கொடியையும் அகற்றினார்.

நாளை நண்பகல் 12 மணிக்கு..
இதனால் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பேசப்பட்டது. டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். குறிப்பாக அகில இந்திய தலைவர் நிதின் நபினை சந்தித்து 5 பக்கங்கள் கொண்ட ஒரு புகார் கடிதத்தையும், அத்துடன் தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது.
இதனால் அண்ணாமலை தனிக் கட்சி தொடங்குவார் என உறுதியாக சொல்லப்பட்டது. ஆனால் இன்று திடீர் திருப்பமாக அண்ணாமலையை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகின. அதே நேரம் அண்ணாமலைக்கு மீண்டும் தமிழக பாஜக தலைவர் பதவி கொடுக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இதனால் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் தான் நாளை 12 மணிக்கு மனம் விட்டு பேசப்போவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மனம் திறந்து உரையாட இருக்கிறேன்
அதில் அவர் கூறியிருப்பதாவது:- "நாளைய தினம் மதியம் 12 மணி அளவில் சமூக வலைத்தளங்களில் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அண்ணாமலையின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற விவாதம் அதிகரித்து வரும் நிலையில், நாளை தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அண்ணமாலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎஸ் டூ அரசியல்வாதி
ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அதிரடி பேச்சு, அதிரடி அரசியலால் இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார்.
எனினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாததால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவரது பதவி பறிக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம் அப்போது அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் கூட சொந்த கட்சிக்குள்ளேயே கட்சியினர் மோதல் தெரிந்தது.
அப்போதில் இருந்தே தமிழக அரசியலில் அண்ணாமலை பெரிதாக கருத்துக்களை கூறுவதை தவிர்த்து வந்தார். தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, தோட்டப்பணி என கூறி பெரிதாக கட்சி பொறுப்புகளையும் வாங்காமல் தவிர்த்து வந்தார். அப்போதில் இருந்தே அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கலாம் என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது அண்ணாமலையின் செயல்பாடுகள் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications