சென்னையின் இதயப்பகுதியில் வரப்போகும் முக்கியமான விஷயம்.. உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: சென்னை அண்ணா சாலை - டேம்ஸ் சாலை - ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில், பாதுகாப்பாகவும் - எளிதாகவும் சாலையை கடப்பதற்காக புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
அண்ணா மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள், டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலையை கடந்து, அண்ணா சாலை, சென்ட்ரல், பூக்கடை செல்கிறது.பிளாக்கர்ஸ் சாலை சிக்னலில் இருந்து, சேப்பாக்கம் வழியாக அண்ணா சாலைக்கும் வாகனங்கள் திரும்புகின்றன.டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலைக்கு செல்லும் வாகனங்கள், தர்கா பஸ் நிலையத்தை கடக்க வேண்டும். அங்கு, ஒரு பஸ் நின்றாலே, இரு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கு தான் வழி உள்ளது. அத்துடன் குறுக்கே மீடியனும் உள்ளது.

இதனால் பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு பேருந்து செல்லும் வரை, கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிளாக்கர்ஸ் சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், சாலை ஓரத்தின் இருபுறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் சிரமத்துடன் செல்கின்றன.
அதேபோல், சேப்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், அண்ணா சாலை நோக்கியும், 'யு - டர்ன்' எடுத்து சென்ட்ரல் செல்லும் போதும், பிளாக்கர்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு செல்லும் போதும், வாகனங்கள் முட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.
இது ஒருபுறம் எனில் மக்கள் சாலைகளில் கடப்பதற்கும் அங்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனிடையே அண்ணா சாலை - டேம்ஸ் சாலை - ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் நடைமேம்பாலம் அமைத்தால் எளிதாக மக்கள் கடந்து போக வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.15 கோடி மதிப்பில் புதிய நடைமேம்பாலம் அமைக்க சிஎம்டிஏ சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்...
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, அண்ணா சாலை - டேம்ஸ் சாலை - ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில், பாதுகாப்பாகவும் - எளிதாகவும் சாலையை கடப்பதற்கு நடை மேம்பாலம் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை நிறைவேற்றும் விதமாக, ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைக்க சிஎம்டிஏ சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வினை இன்று மேற்கொண்டோம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும் வரவிருக்கின்ற நடைமேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கும்!" இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் அனைத்து நகரங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சாலைகள் சந்திக்கும் இடங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிகமான மக்கள் இருபுறமும் சாலையை கடந்து சென்றாக வேண்டிய நிலையில் உள்ள இடங்களை கணக்கிட்டு எஸ்கலேட்டர் உடன் ஆகாய நடை பாதை அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications