ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு தமிழக அரசின் குட் நியூஸ்! அப்போ ரூ 1000 கன்பார்ம்?
சென்னை: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக 2 லட்சம் பயனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் கார்டுகள் செல்கின்றன.
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அரசு கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு மானிய விலையிலும் விலையில்லாமலும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள் ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு நிறைய சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. கடந்த காலங்களில் முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நிறைய விலையில்லா பொருட்களை கொடுத்துள்ளனர் . அது போல் திருமண உதவி திட்டம், கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை ரூ 12 ஆயிரம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
அது போல் பொங்கல் தொகுப்பு பொருட்கள், வெள்ள நிவாரணம், கொரோனா உதவித்தொகை உள்ளிட்டவையும் இந்த ரேஷன் கார்டுகளை வைத்து வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே புத்தகம் போல் இருந்த ரேஷன் கார்டுகளில் பக்கங்கள் தீர்ந்து விட்டால் அதில் இணைப்புகள் ஒட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன.
பலரது கார்டுகள் கந்த கோலமாகவே இருந்தன. இவை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் அட்டையாக மாற்றப்பட்டு மொபைல் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டது. அது போல் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கும் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையை பெற நிறைய பேர் ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து வருகிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் 2.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப்படாத நிலையில் கடந்த மார்ச் மாதம்தான் ஸ்மார்ட் கார்டு ஒப்புதல் ஆகிவிட்டது என குறுஞ்செய்தி சிலருக்கு வந்தது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் காரணமாக அவர்களுக்கு கார்டுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 2.24 லட்சம் பேருக்கும் புதிய கார்டுகள் வழங்கப்படுகிறது. அது போல் ஜூன் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கப்படும் என சொல்லப்பட்டது.
தற்போது மேலும் ஒரு லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர். இதில் 2 லட்சம் பேருக்கும் ரேஷன் கார்டுகள் தயாராகிவிட்டதால் இந்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வீடு தேடி விநியோகம் செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
எனவே புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுவிட்டால், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications