கடித்து குதறப்பட்ட சிறுமி! 23 வகை நாய்களை வளர்க்க தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: சமீபத்தில் சென்னையில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் நாய் வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொடுத்திருக்கிறது.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இருக்கிறது. இந்த பூங்கா பராமரிப்பாளராக இருக்கும் ரகுவின் மகள் வழக்கம்போல பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 2 ராட்வீலர் நாய்கள் சிறுமியை சரமாரியாக கடித்த குதறியிருக்கின்றன. இந்த நாயின் உரிமையாளர் நாய்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பூங்காவுக்கு அழைத்து வந்ததுதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளரான புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நாய்களை வளர்ப்பதற்கான புதிய வழிக்காட்டுதலை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"கடந்த 6ம் தேதியன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. 12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடைபராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான,
1. பிட்புல் டெரியர்
2. தோசா இனு
3. அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர்
4. பிலா ப்ரேசிலேரியா
5. டோகா அர்ஜென்டினா
6. அமெரிக்கன் புல் டாக்
7. போயர் போயல்
8. கன்கல்
9. சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்
10. காக்கேஷியன் ஷெபர்டு டாக்
11. சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக்
12. டோன் ஜாக்
13. சர்ப்ளேனினேக்
14. ஜாப்னிஸ் தோசா
15. அகிதா மேஸ்டிப்
16. ராட்வீலர்ஸ்
17. டெரியர்
18. ரொடீசியன் ரிட்ஜ்பேக்
19. உல்ப் டாக்
20. கேனரியோ அக்பாஸ் டாக்
21. மாஸ்கோ கார்ட் டாக்
22. கேன்கார்சோ
23. பேண்டாக்
என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும். இனப்பெருக்கம் செய்வதற்கும். வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.
நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும்.
அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்" என தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications