புத்தாண்டு 2022: பழ அலங்காரத்தில் ஸ்ரீலட்சுமி சாய்பாபா.. சென்னையில் வீற்றிருக்கும் 72 அடி உயர சிலை!
சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை முகப்பேரில் ஸ்ரீலட்சுமி சாய்பாபா திருக்கோயிலில் பாபாவுக்கு பழ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா, ஓமிக்ரானுடன் பல்வேறு கஷ்டங்களை மக்கள் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அனுபவித்துவிட்டார்கள். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு முடிந்து நேற்று முதல் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியது.
பொதுவாக ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும் சரி தமிழ் புத்தாண்டாக இருந்தாலும் சரி பெரும்பாலானோர் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வரும் ஆண்டு நன்றாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்வர்.

ஓமிக்ரான்
கொரோனா, ஓமிக்ரானுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த போதிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருந்தனர். அந்த வகையில் அவரவர் விருப்பத்தின் பேரில் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு நடத்தினர்.

புத்தாண்டு பிறப்பு
நிறைய கோயில்களில் புத்தாண்டு பிறப்பையொட்டி கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் பூஜைகள் தொடங்கின. அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள ஸ்ரீ லட்சுமி சாய்பாபா கோயிலில் புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெற்குன்றம் பாலத்திற்கு அருகே உள்ள இந்த கோயிலில் 72 அடி உயர சாய்பாபா வீற்றிருக்கிறார்.

லட்சுமி சாய்பாபா
உள்ளே மூலவரான சாய்பாபா லட்சுமி சாய்பாபா என அழைக்கப்படுகிறார். அது போல் இந்த கோயிலில் லட்சுமி கணபதி, குரு பகவான், லட்சுமி, துர்க்கை, அனுமன், நவகிரகங்கள் ஆகியவற்றுக்கும் சன்னதி உள்ளன. இந்த கோயிலில் உள்ள மூலவர் லட்சுமி சாய்பாபாவிற்கு ஆப்பிள், கிரீன் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு, பைன் ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மக்கா சோளம்
அது போல் கரும்பு, மக்கா சோளம், இளநீர் உள்ளிட்டவைகளும் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. கோயிலின் உள்ளே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த கோயிலில் பாக்கெட் சைஸ் காலண்டரும் லட்சுமி சாய் பாபாவுக்கு அபிஷேகம் செய்த ஒரு ரூபாய் காசும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications