கர்ப்பமாக இருக்கும் மனைவி.. போலீஸ் கணவரை இப்படியா பார்க்கனும்.. கல்யாணம் ஆன 5 மாதத்தில் சோக முடிவு
சென்னை: சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் ஆகி 5 மாதமே ஆகி, மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் போலீஸ்காரர் இந்த சோக முடிவை எடுத்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் அருண் (வயது 27). இவர் சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 5 மாதத்துக்கு முன்பு தான் அருணுக்கு திருமணம் ஆனது. இதையடுத்து மனைவி அஸ்விதாவுடன் அருண கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

தற்போது அஸ்விதா கர்ப்பமாக இருப்பதால், கடந்த மாதம் அருண் மனைவியை அவரது தாய் வீட்டில் கொண்டு விட்டுவிட்டார். அருண் மட்டும் போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். குடும்பத்தினர் மற்றும் மனைவியிடம் செல்போனில் அருண் பேசி வந்தார். ஆனால் அவர் ஏதோ மனை உளைச்சலில் இருந்தது போல் தெரிகிறது. இது பற்றி அவரது மனைவியும் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் அதுபற்றி அவர் கூறவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை காவல்நிலைய பணி முடிந்ததும் வீட்டிற்கு சென்று, உள்பக்கமாக பூட்டிக்கொண்ட அருண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஏழுகிணறு போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்த போது அவர் தூக்கில் பிணமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி கதறி அழுதார். போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த தொந்தரவின் காரணமாக அவர் தற்கொலை செய்ததாக தெரியவந்தது.
பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வேலை செய்து வரும் போலீஸ்காரர் ஒருவர் அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அருண் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதேபோன்று தற்கொலை செய்வதற்கு முன்பு அருண் அவரது சகோதரருக்கு செல்போனில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மெசேஜில், 'என் குடும்பத்தை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கணவர் தற்கொலையால் மிகுந்த மனவேதனை அடைந்த அஸ்விதா, தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கூறுகையியில், 'கொஞ்ச நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்தது போல் தெரிந்தது. மேலும், எனக்கு ஒரு போலீஸ்காரர் தொல்லை கொடுத்து வருவதாகவும், ஒரே பிரச்சினையாக இருக்கிறது என்றும் அவரது நண்பர்களிடம் கூறியிருக்கிறார். எனவே அது குறித்து விசாரிக்க வேண்டும்" என்று புகாரளித்துள்ளார்.
அஸ்விதா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். திருமணம் ஆன 5 மாதங்களில் போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications