ரொம்ப காஸ்ட்லி கிப்ட்! பெட்ரோல், டீசலை புதுமண தம்பதி்க்கு பரிசாக கொடுத்த சிங்கிள் பசங்க.. வைரல்!!
சென்னை: அம்பத்தூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிகளுக்கு வெங்காயம், தக்காளி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சீதனமாக வழங்கிய நண்பர்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுமட்டுமின்றி கொரோனாவே மிரண்டு ஓடும் அளவிற்குத் திருமண கட்டவுட் வைத்தும் அசத்தியுள்ளனர்.
Recommended Video
சமீப காலமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால் ஏழை மக்கள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு
குறிப்பாக தற்போது வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ள பெட்ரோல் 103 ரூபாய், டீசல் 99.59 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. சில மாநிலங்களில் டீசல் விலையும் சதமடித்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாகச் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவும் அதிகரித்துள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது.

வினோத சீதனம்
அதி தீவிர கனமழை மற்றும் டீசல் விலையேற்றத்தால் காய்கறி விலை அதிகமாக உள்ளது. தற்போது வெங்காயம் ஒரு கிலோ ரூ 70க்கும், தக்காளி ஒரு கிலோ ரூ 65க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை அம்பத்தூர் பகுதியில் திருமண தம்பதிக்கு அவரது நண்பர்கள் அளித்த சீதனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிக்கனமாக இருங்க
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கவிபாரதி-சுமித்ரா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அம்பத்தூரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் 2 லிட்டர் பெட்ரோல், 2 லிட்டர் டீசல், 2 கிலோ வெங்காயம், 2 கிலோ தக்காளி ஆகியவற்றை, சீதனமாக வழங்கியுள்ளனர். விலைவாசி உயர்வை எடுத்துக் கூறி குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்த வேண்டும் என்பதை விளக்கும் விதமாக மணமக்களுக்கு இவற்றைப் பரிசாக அளித்தனர்.

கொரோனா கட்அவுட்
மேலும் கொரோனாவே மிரண்டு போகும் அளவுக்குத் திருமண வாழ்த்து என்கிற பெயரில் கொரோனா தொடர்பான அடைமொழியுடன் பெயர்கள் கூடிய கட்-அவுட் வைத்து அதில் IT ஊழியருக்கும் கூட தொற்ற உறுதியாகியுள்ளது எனவும் இனிமேல் நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல உன் மனைவியுடன் எனவும் கிண்டலடித்து பேனர் வைத்துள்ளனர். இந்த சிங்கள் பசங்க! இவர்கள் கொடுத்த சீதனம், வைத்த பேனர் என அனைத்துமே திருமணத்திற்கு வந்தவர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications