உருவாகும் காற்றழுத்தம்.. இன்னும் 3 நாளில் அடுத்த புயல்.. பெயர் என்ன தெரியுமா?
சென்னை: நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்க கடலில் அடுத்ததாக புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
Recommended Video
வங்கடலில் அண்மையில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது..
இந்த புயல் கரையை கடக்கும் போது கடலூர் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

புதிய புயல்
நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எப்படி வரும்
நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தெற்கு வங்க கடலில் புயல் உருவானாலும் இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொறுத்து தமிழகத்தில் தீவிர மழை பெய்யுமா அல்லது ஆந்திரா, ஒடிசாவில் அதிக மழை பெய்யுமா என்பது தெரியும்.

பரபரப்பு
நிவர் புயல் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தில் கரையை கடந்து திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் நிலையில் அந்த பகுதிகளில் எல்லாம் மழை வெளுத்து வருகிறது. இந்த புயலின் தாக்கம் குறைய இன்னும் இரண்டு நாள் ஆகும். அதற்கு மறுநாளே புயல் உருவாகுவதால் பரபரப்பு நிலவுகிறது

மாலத்தீவு
வழக்கமாக புதிதாக உருவாகும் புயல்களுக்கு இந்தியாவை சுற்றி உள்ள 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம் அந்த வகையில் தெற்கு வங்க கடலில் உருவாகும் புதிய புயலுக்கு புரெவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை மாலத்தீவு வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications