பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை வழக்கில் தப்பிய 2 பேர் கைது.. சென்னையில் வைத்து தூக்கிய என்.ஐ.ஏ!
சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு தலைமறைவு குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி ராமலிங்கம், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தப் பகுதியில் நடந்த மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ராமலிங்கம் கொலைச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கின் விசாரணையை 2019, மார்ச் மாதத்தில் தமிழக போலீசாரிடமிருந்து தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆகஸ்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் 18 குற்றவாளிகள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த 18 பேரில் ஆறு பேர் தலைமறைவாகி இருந்தனர். அவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமறைவானவர்கள் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு என்ஐஏ ஆறு தலைமறைவு குற்றவாளிகளில் ரஹ்மான் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறைக்கு அருகே அப்துல் மஜீத் மற்றும் ஷாஹுல் ஹமீது ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. மேலும் வழக்கில் 19-வது குற்றவாளியாக அடையாளம் காணப்படும் முகம்மது அலி ஜின்னா என்பவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது இருவரும் மீண்டும் தப்பிச் சென்ற நிலையில் என்ஐஏவால் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை கைது செய்ய என்.ஐ.ஏ தீவிரம் காட்டி வருகிறது.
கைது செய்யப்பட்ட அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் ராமலிங்கம் கொலையில் ஈடுபட்டதாகவும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி, திருபுவனத்தில் உள்ள பெரியபள்ளி மசூதி அருகே, மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, வகுப்புவாத வெறுப்பினை பரப்பும் நோக்கத்துடன் ராமலிங்கத்தை வெட்ட சதி செய்திருந்ததாக என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications