விஜய்க்கு ஓட்டு போட்டதும் போதும்.. ராத்திரி நிம்மதியா தூங்க கூட முடியல! அழையா விருந்தாளி மின்வெட்டு!
சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயில் நிலவும் சூழலில், நள்ளிரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பெரும் சிரமமாக மாறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் ஏசி, குளிர்பதன சாதனங்கள் மற்றும் மின்சார உபயோகங்கள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு நேர பணிகள் அதிகமாக நடைபெறுவதாலும் மின் தேவையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னையின் கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மின்வெட்டு
சில இடங்களில் இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு நீடித்ததாக கூறப்படுகிறது.
கொளத்தூர் பகுதியில் நீண்ட நேர மின்தடை ஏற்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மின்வெட்டு அதிகரிப்பு
சென்னை மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களிலும் இதே நிலை நீடிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மின்வெட்டு அதிகரித்துவிட்டதாக சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. "எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியாத நிலை உள்ளது" என பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் தடை
இரவு நேரங்களில் திடீரென மின்சாரம் தடைபடுவதால் பெண்கள் கூட வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். வேலைக்கு செல்லும் ஊழியர்களும் தூக்கமின்மையால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். மின்வெட்டு குறித்த புகார்களை தெரிவிக்க மின்வாரிய அலுவலகங்களை தொடர்புகொள்ள முயன்றாலும் சரியான பதில் கிடைப்பதில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிலர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகள்
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்கும்போது, "கோடை வெயில் காரணமாக இரவு நேரங்களில் மின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்திருப்பதும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு நேர பணிகள் நடைபெறுவதும் மின் தேவையை உயர்த்தியுள்ளது. இதனால் மின் மாற்றிகள் மற்றும் வளைய சுற்று அமைப்புகளில் அழுத்தம் அதிகரித்து, டிரிப்பர் செயல்பட்டு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர். மேலும், புகார் கிடைத்தவுடன் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்து மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கோடை வெப்பம்
ஆனால் பொதுமக்கள் தரப்பில், "பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. குறிப்பாக இரவு நேர மின்வெட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது" என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. கோடை வெப்பம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல பகுதிகளில் எழுந்துள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் மின்தடை ஏற்படாமல் தடுக்கும் வகையில் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், பழைய மின் மாற்றிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications