தலைத்தூக்கும் கொரோனா.. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா? முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனுடன் ஓமிக்ரான் அச்சமும் நிலவி வருகிறது. இது வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழலையர் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எண்ணிக்கையில் கட்டுப்பாடு உள்ளிட்டவை விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொரோனா பரவியதை போல் பொங்கல் பண்டிகையில் தமிழகத்தில் மேலும் பாதிப்பு அதிகரித்துவிட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் ஓமிக்ரான் சமூகபரவலாகவிட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கால கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தினால் கொரோனா தொற்று குறையும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் ஆலோசனையை முன்வைத்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஆலோசனையின் முடிவில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தும் என்றே தெரிகிறது. அத்துடன் கோயில்களில் வாரஇறுதி நாட்களில் கட்டுப்பாடு, சுற்றுலா தளங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள், கடைகள் திறப்பு நேரத்தை குறைப்பது, கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை அமலாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருப்போம்.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications