மேய்ச்சல் நிலம்.. நீலகிரி மேய்க்கால் நிலத்தை விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என அறிக்கை தேவை: ஹைகோர்ட்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலத்தில் இனி ஒரு அடி நிலம் கூட விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேய்க்கால் நிலங்கள் என்ன? தமிழ்நாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் பலவகை உண்டு. அவை, மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகள், சாலை, இடுகாடு, நத்தம் புறம்போக்கு நிலம் போன்றவற்றை சொல்லலாம்.

தமிழகத்தில் மேய்ச்சல் நிலம்
இதில் மேய்க்கால் நிலம் என்பது, கிராமத்தில் ஆடு மாடுகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும்.. இந்த இடம், மழைக்காலங்களில் பசுமையாகவும், கோடைக்காலங்களில் வறண்டும் காணப்படும். இங்கு கால்நடைகளின் கழிவுகளை சேர்த்துவைத்து, வயல்களில் உரமாக பயன்படுத்துவார்கள்..
இந்த நிலத்தை ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் என்பார்கள். அதாவது, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர் வழி தடங்களில் இருக்கக்கூடிய இடங்கள் மேய்க்கால் நிலமாக கருதப்படும். முழுக்க முழுக்க ஆடு மாடு மேய்ப்பதற்காக அரசாங்கமே ஒதுக்கியிருக்கும் நிலமாகும்.. எனவே, பொதுமக்கள் இந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியாது. இந்த நிலங்களை விலைக்கு வாங்கவும் முடியாது.. பட்டா கோரவும் முடியாது.
மேய்க்கால நிலங்கள்
எனினும், இந்த நிலத்தை கால்நடைகளை மேய்ப்பதற்கு பயன்படுத்தாமல், சிலர் வீடுகள், கடைகளை கட்டிக்கொண்டு சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன.. இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றம் வரை சென்றது.. இறுதியில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் யாருமே ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று ஹைகோர்ட் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இதேபோன்ற மேய்க்கால் நிலம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சோலூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலங்களை தனியார் விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமித்துள்ளதாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
அப்போது நீதிபதிகள், "பழங்குடியினரின் உரிமைகளை தடுக்கவில்லை. அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 390 ஏக்கர் நிலங்களில், பழங்குடியினர் அல்லாதவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.. மொத்த நிலத்தில், 70 சதவீத நிலம் வரை பழங்குடியினர் அல்லாதவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் பரப்பு மேலும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இனி பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு அடி நிலம் கூட விவசாய நிலங்களாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தள்ளிவைப்பு
அத்துடன், 390 ஏக்கர் பரப்பளவை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications