வாயை விட்ட அமர் பிரசாத்.. மறுநாளே தூக்கிய நிர்மல் குமார்! இலைகளாய் மாறிய தாமரைகள்! உறைந்துபோன பாஜக
"அதிமுகவை எச்சரித்து அமர்பிரசாத் ரெட்டி விமர்சித்துக்கொண்டு இருக்கும்போதே, அக்கட்சியை சேர்ந்த 4 பேரை இன்று அதிமுகவில் இணைந்து இருக்கிறார் நிர்மல் குமார்."
சென்னை: அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு தமிழ்நாடு பாஜகவிலிருந்து வெளியேறிய நிர்மல் குமாரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து அதிமுகவில் இணைத்ததற்கு அமர் பிரசாத் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், இன்று பாஜகவ சேர்ந்த 4 பேரை ஒரே நேரத்தில் அதிமுகவில் இணைந்து உள்ளார் நிர்மல் குமார்.
பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த நிர்மல் குமார் கடந்த ஞாயிற்று கிழமை அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அண்ணாமலை மீது திமுக அமைச்சருடன் ரகசியமாக பேசுகிறார், மனநலம் குன்றியவர் போல் நடந்துகொள்கிறார், பாஜகவினரை செருப்பாக பயன்படுத்துகிறார் 420 மலை என பல்வேறு குற்றச்சாட்டுகளை நிர்மல் குமார் சுமத்தினார்.

அதிமுகவில் இணைப்பு
கட்சியில் இருந்து விலகிய சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த அவர், "பல பிரச்சனைகளை தாண்டி அதிமுகவை 2017 ல் இருந்து கட்டி காப்பாற்றியவர் எடப்பாடியார். இந்த காலத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எடப்பாடி அவர்கள்தான் எதிர்காலமாக இருப்பார்." என்றார்.

அமர் பிரசாத் கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத் ரெட்டி, "அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

காட்சி கொடுங்கள் ஐயா
மற்றொரு பதிவில், "கட்சிக்கே பிரச்னை என்றதும், 'காட்சி கொடுங்கள் ஐயா' என்று ஓடோடி வந்தவர்களெல்லாம் இன்று, அகில உலக தலைவர்களாக காட்டிக் கொள்ள விழைகின்றனர். உதவி செய்தவர்களை துச்சமாக மதிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல் என்றால், அந்த அரசியல் எங்களுக்கு ஒரு நாளும் வேண்டாம்!" என்று விமர்சித்தார் அமர் பிரசாத் ரெட்டி.

திராவிட கட்சிகள் மீது விமர்சனம்
அத்துடன், "பாஜக 2026 ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும். இதற்கு முன் இருந்ததை விட தமிழ்நாடு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேசிக்கிறார்கள். மக்கள் தலைவர் அண்ணாமலைதான் தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை. கடந்த 40 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுகள் தமிழ்நாட்டை எதிர்கால தலைமுறையினருக்கு நம்பிக்கை அற்றதாக்கிவிட்டன.

அதிமுகவில் திலிப் கண்ணன்
இவ்வாறு அதிமுகவை எச்சரித்து அமர்பிரசாத் ரெட்டி விமர்சித்துக்கொண்டு இருக்கும்போதே, அக்கட்சியை சேர்ந்த 4 பேரை இன்று அதிமுகவில் இணைந்து இருக்கிறார் நிர்மல் குமார். நேற்று அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியில் இருந்து வெளியேறிய பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் அதிமுகவில் இணைந்துள்ளார்.

4 பேர் அதிமுகவில்
அவரோடு பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் ஜோதி, பாஜக முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோரும் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அடுத்தடுத்த விலகலால் தமிழ்நாடு பாஜக அதிர்ச்சியில் உள்ளது.












Click it and Unblock the Notifications