திருச்சி டூ சென்னை.. ஒரே விமானத்தில் பயணித்த நிர்மலா-ப.சிதம்பரம்! கேள்வி பட்டதும் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரமும் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பயணம் செய்தனர். நாட்டின் முன்னாள் மற்றும் இந்நாள் நிதியமைச்சர் ஒரே விமானத்தில் பயணம் செய்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் இன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தார். ப. சிதம்பரம் வந்த அதே விமானத்தில் தற்போதய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனும் பயணித்தார். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், பின்னர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அதன்பிறகு, சென்னைக்கு விமானம் மூலமாக புறப்பட்டு வந்தார். அதே விமானத்தில்தான் ப. சிதம்பரமும் சென்னைக்கு வந்தார். முன்னதாக திருச்சி விமான நிலையத்திற்கு ப. சிதம்பரம் வந்த போது, காங்கிரஸ் முன்னாள் மேயர் சுஜாதா, சிதம்பரத்திடம் நிர்மலா சீதாரமன் வந்தது குறித்து கூறினார். இதற்கு சிதம்பரம், ஓ அப்படியா என சொல்லிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் நாட்டின் முன்னாள் மற்றும் இந்நாள் நிதியமைச்சர்கள் பயணம் செய்த சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப. சிதம்பரம், கூறியதாவது:- சென்னை மெரினாவில் நடைபெற்ற சம்பவம் துரதிருஷ்டவசமானது. மயக்கம் போட்டு விழுந்து இருக்கிறார்கள் .
ஏற்கனவே சில நோய்கள் இருந்ததாக பத்திரிகைகளில் படித்தேன். கூட்ட நெரிசலில் இறந்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு அரசு இழப்பீடு தரும் என்று நம்புகிறேன். விமானப்படை சாகசம் பாராட்டுக்குரியது. 15 லட்சம் பேர் கண்டு களித்துள்ளார்கள். இரண்டு மாநில தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை கேட்கிறீர்கள். நாளைக்கு தெரிந்துவிடும். கருத்துக்கணிப்புகளை நான் ஏற்றுக்கொள்வது கிடையாது.
ஆனால் எங்களுக்கு வந்த செய்திகள், ஹரியானா ஜம்மு காஷ்மீர் இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்பதுதான் எங்களுக்கு கட்சி ரீதியாக வந்த செய்தி. அரசியல் நோக்கர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். அந்த ஊர் பத்திரிகையாளர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். நாங்கள் விரும்பியது நாளை நடைபெறும் என்று நம்புகிறேன். இஸ்ரேல்- ஈரான் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு என்பதை அரசு தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த போர் நிற்க வேண்டும்.
அதைத்தான் பிரதமர் சொல்கிறார். அதில் கட்சி வேறுபாடு கிடையாது. அனைத்து கட்சிகளும் அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றன. போர் நிற்க வேண்டும். போர் தொடங்கியது. அதற்கு பழிவாங்கியது எல்லாம் இருக்கட்டும்.. ஓராண்டு போர் நீடிக்கிறது. ஓர் ஆண்டு போர் என்பது மக்களுக்கு மிகுந்த துன்பத்தை தரும். ஆக போர் நிற்க வேண்டும் என்று பிரதமர் முயற்சி எடுத்து இருக்கிறார். அதை எல்லா கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications