பிரதமர் சந்திரபாபு நாயுடு? நிதிஷ்? இந்திய அரசியலில் திரும்பிய வசந்தம்! கிங் யாரு? கிங் மேக்கர் யாரு
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. தேசிய அளவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 280 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 238 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 225 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது.
கோட்டையிலேயே காலி; பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்திலேயே அந்த கட்சி அதிக இடங்களில் தோல்வி அடையும் நிலையில் உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மட்டும் 40ல் இந்தியா கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் கோட்டையிலேயே இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் முன்னணி பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது. அங்கே பாஜக கடுமையாக தோல்வி அடையும் நிலை உள்ளது.
என்ன நடக்கும்?: பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம்.
உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான்.
ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. பாஜகவை ஆதரித்தாலும் மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்க கூடியவர்கள். சந்திரபாபுநாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக மோடியை எதிர்த்தவர்.
இப்படிப்பட்டவர்கள் மோடி பிரதமர் ஆக எதிர்க்கலாம். ஏன் சமயங்களில் என்டிஏ கூட்டணியை உடைத்துவிட்டு இந்தியா கூட்டணிக்கு கூட செல்லலாம். இன்னும் சொல்லப்போனால் நிதிஷ் அல்லது சந்திர பாபு நாயுடு பிரதமராக முன்னிறுத்தப்பட்டு இந்தியா கூட்டணி கூட ஆட்சி அமைக்கலாம்.
இந்தியாவில் மாநில கட்சிகளின் பலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. மாநில கட்சிகளுக்கான வசந்தம் இந்தியாவில் ஏற்பட்டு உள்ளது.
இப்போது தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் சூழல் உள்ளதால் யார் கிங்.. யாரு கிங் மேக்கர் ஆக போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிஜு ஜனதா தளம் வெறும் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் ரேஸில் இல்லை. இதனால் தெலுங்கு தேசம் அல்லது ஜேடியூ வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications