Exclusive: ஹோட்டல் உணவை "கலைஞர்" சாப்பிடமாட்டார்! காரில் பயணிப்பதை விரும்புவார்! நித்யா நினைவலை
சென்னை: கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வரும் சூழலில், அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிவதற்காக அவரது உதவியாளர் நித்யாவிடம் ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.
அப்போது கருணாநிதி பற்றி பல்வேறு ருசிகர தகவல்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
அதன் விவரம் வருமாறு;

கார் பயணம்
''கலைஞரை பொறுத்தவரை எப்போதும் தன்னுடன் 4 பேராவது உடன் இருக்க வேண்டும் என நினைப்பார். மனம்விட்டு பேசுவது அவருக்கு பிடிக்கும். வெளியூர் பயணங்கள் என்றால் பெரும்பாலும் சாலை மார்க்கமாக காரில் பயணிப்பதை அதிகம் விரும்புவார். அந்தப் பயணத்தின் போது துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி போன்றவர்களை உடன் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டே செல்வார். பயணத்தில் பாட்டுக் கேட்கும் வழக்கம் அவருக்கு இல்லை.''

முறுக்கு சாப்பிடுவார்
''எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார், எல்லாமே அறிவானதாகவும், ஆழமான சிந்தனைகளை கொண்டதாகவும் இருக்கும். தன்னுடன் இருப்பவர்களை அறிவாளிகளாக பேச்சின் மூலம் மாற்றுவார். பயணங்களின் போது முறுக்கு அதிகம் விரும்பி சாப்பிடுவார். பழங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆப்பிள், மாதுளை ஆகிய இரண்டு பழங்களும் கலைஞருக்கு ரொம்ப பிடிக்கும். அதையும் சாப்பிடுவார். ஹோட்டல் உணவை எப்போதுமே கலைஞர் சாப்பிடமாட்டார்.''

கோபாலபுரம் சமையல்காரர்
''அவர் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு கோபாலபுரத்தில் இருந்து சமையல்காரரையும் உடன் அழைத்துச் சென்றுவிடுவார். எவ்வளவு பெரிய நட்சத்திர விடுதிகளாக இருந்தாலும் சரி, அங்கே கலைஞருக்கு அவருடைய சமையல்காரர் தான் உணவு சமைத்துக் கொடுப்பார். ஒரு சில இடங்களில் மட்டும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இல்லத்தில் இருந்து வரும் உணவை சாப்பிடுவார். அதேபோல் காஃபி விரும்பி சாப்பிடுவார். மேடைகளில் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு அவர் ஒரு டம்ளரில் ஏதோ குடிப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். அது காஃபிதான்.''

யார் வந்தாலும்
''இன்னொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும், தன்னைச் சந்திக்க யார் வந்தாலும் அழைத்து பேசுவார் கலைஞர். இரவு 10.30 மணிக்கெல்லாம் கூட இருக்கச் சொல்லுயா வருகிறேன் என முகம் கோணாமல் வந்து சந்திப்பார். அதேபோல் கட்சியினர் புகார்களை முறையிடுவதற்காக வந்தால், முதலில் அழைத்து பேசி என்ன பிரச்சனை என்பதே அவரே நேரடியாக அறிந்துகொள்வார். அந்த இடத்திலேயே பேசி அதனை முடிவுக்கு கொண்டு வந்து வந்தவர்களை மகிழ்ச்சியுடன் ஊருக்கு அனுப்பி வைப்பார். தலைவரே சொல்லிட்டார், சரி விட்டுக்கொடுப்போம் என அவர்களும் செல்வார்கள்.''

ஒரு நொடி
''கலைஞரை பொறுத்தவரை ஒரு நொடி கூட வீணாகக் கூடாது என நினைப்பார். இரவு 12 மணிக்கு மேல் தான் தூங்குவார், காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். தினமும் சவரம் செய்து தன்னை பளிச்சென வைத்துக்கொள்வார். அதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்துவிடுவார். நினைவாற்றலில் அவருக்கு நிகருக்கு அவர் தான். அந்தளவு ஷார்ப்பாக எல்லோரையும் நினைவில் வைத்துக்கொள்வார். எங்களுக்கே பெரிய ஆச்சரியமாக இருக்கும்.''

ஏராளம் ஏராளம்
''கலைஞரை பற்றி இப்படி சொல்ல வேண்டுமானால் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் அது நன்றாக இருக்காது. அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் போது, இன்னும் விரிவாக பேசுகிறேன்'' எனக் கூறி, கருணாநிதியின் உதவியாளர் நித்யா இந்த தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications