அடேங்கப்பா.. சப்தம் இல்லாமல் 8 சாதனைகளை புரிந்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற நித்யானந்தா!
சென்னை: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, 8 சாதனைகளை படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றதாக கைலாசா அறிவித்துள்ளது.
பாலியல் பலாத்கார புகார், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்குள்ளான நித்யானந்தா, கைது நடவடிக்கைக்கு அஞ்சி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கி அவர் தனிகொடி, தனி பாஸ்போர்ட், தனி கரன்சி என உருவாக்கினார்.
தினந்தோறும் பக்தர்களுக்கு லைவில் சத்சங்கம் செய்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் அவர் நேரலையில் ஆளையே காணோம். திடீரென ஒரு நாள் பேஸ்புக் பதிவில் தனக்கு உடல்நிலை சரியில்லை, சமாதி நிலையில் இருப்பதாக நித்யானந்தா பெயரில் ஒரு பதிவு வெளியானது.
நித்யானந்தா ரொம்ப நல்லவருங்க! கண்டிப்பா ஒருநாள் வருவார் பாருங்க! விஸ்வாசம் காட்டும் திருச்சி சூர்யா!
நித்யானந்தா
அந்த பதிவில் நித்யானந்தாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை சுற்றி ஏராளமான மருத்துவர்கள் இருப்பதாகவும் தன்னை கீழே படுக்க வைத்து மூச்சு விடுமாறு சிரமப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
அருணகிரிநாதருக்கு தீபம்
தனது உடல்நலனுக்காக அருணகிரி நாதருக்கு தீபம் ஏற்றி வழிபடுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். எனவே நித்யானந்தா உடல்நலம் மோசமடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இவையெல்லாம் உறுதிப்படுத்த முடியாததாகவே இருக்கின்றன. இந்த நிலையில் அண்மையில் திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கும் இயக்குநர் பேரரசுவுக்கும் விருதுகளை ஆன்லைனில் வழங்கி கைலாசா கவுரவித்தது.
77ஆவது பொது சபை
மேலும் ஐநா சபையின் 77 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐநா சபையின் தூதுவராக விஜயப்பிரியா நியமிக்கப்பட்டு அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பல்வேறு நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசிய நிலையில் கைலாசாவின் அரசியல் சாசனம் என்று கூறப்படும் பகவத் கீதையின் முன்னுரையையும் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
8 சாதனைகள்
இந்த நிலையில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும் அவை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கைலாசாவின் பேஸ்புக் பக்கத்தில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் வாசித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, தனி ஒருவரின் அதிகபட்ச புத்தகங்கள் (1123), அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், அதிகபட்ச பிரம்மோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது (7407 டாப்பிக்குகளில் 289,928 மணி நேரம்) உள்ளிட்ட சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.