நான் உயிரோட இருக்கேன்.. 2 மணிக்கு வீடியோ போட்ட நித்தி! சார் அது பழைய வீடியோ.. கொண்டையை மறந்த கைலாசா!
சென்னை: பிரபல சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து நேற்று சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலாவிய நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக கைலாசா விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2.37 மணிக்கு, 'நான் உயிரோடு இருக்கேனா? சந்தேகத்தை தீர்த்து வையுங்க" என நித்தியானந்தா பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. ஆனால் இந்த வீடியோ மிகவும் பழைய வீடியோ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நித்தியானந்தா பேசிய வீடியோவை புதிய வீடியோ போல மீண்டும் பதிவிட்டு இருப்பதாக விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.
பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நித்யானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தோடு வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், அவர் மீண்டும் ஆன்லைனில் தோன்றி பக்தர்களிடையே உரையாற்றினார்.
அதற்குப் பிறகு நித்தியானந்தா குறித்த தகவல்களை மக்கள் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென நித்தியானந்தா உடல்நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களையும் மீடியாக்களையும் ஆக்கிரமித்தது. நித்தியானந்தாவின் உறவினர் ஒருவர் இந்து மதத்திற்காக நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என பேசியது பரபரப்பை கிளப்பியது. நித்தியானந்தா உயிரிழந்து விட்டதாக பலரும் செய்தி பரப்பிய நிலையில் கைலாசா அதனை மறுத்தது.
மேலும் நித்தியானந்தா ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படக் கூடிய நிலையில் இருப்பதாகவும், கடந்த மார்ச் 30ம் தேதி யுகாதி விழாவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய வீடியோவையும் வெளியிட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2.37 மணிக்கு நித்தியானந்தாவின் ப்ளூ டிக் பெற்ற எக்ஸ் பக்கத்தில் அவர் பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. நிறைய பேர் நான் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களிலும் மெயின் ஸ்க்ரீன் மீடியாக்களிலும் செய்தி போட்டு வருகின்றனர். எனக்கே நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா? ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க.. 4000 வீடியோக்களுக்கு மேல் இருக்கிறது. இந்த வீடியோக்களை பார்ப்பதற்கு எனக்கு பல நாட்கள் தேவை" என பேசி இருந்தார்.
இதை அடுத்து நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் நித்தியானந்தா புதிய வீடியோ போட்டு இருக்கிறார் என நம்பி இருந்தனர். ஆனால் அது பழைய வீடியோ என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து தகவல் பரவி நிலையில் அவர் மரணம் அடைந்ததாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினர். அப்போதுதான் நித்தியானந்தா இந்த வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் நித்தியானந்தா யுகாதி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த வீடியோவை இணைத்து இருந்தது. அதில் மெலிந்த தேகத்துடன் நித்தியானந்தா இருந்தார் ஆனால் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் நித்தியானந்தா சற்று உடல் பருத்த நிலையில் இருப்பதை பார்க்க முடியும். இதை அடுத்து பழைய வீடியோவை போட்டு சமாளித்து வருகிறார் நித்தியானந்தா என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications