குடியரசு தின விழாவில் கட்கரி-ராகுல் அருகருகே அமர்ந்து பேச்சு.. அரசியலில் பரபரப்பு
சென்னை: குடியரசு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் அருகருகே அமர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டபோது, இருவரும் அவ்வப்போது பேசிக்கொண்டது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தின் பலத்தை எடுத்துக் காட்டும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தபோது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு பேசியபடி இருந்தனர்.
கடந்த வருடம் குடியரசு தின அணிவகுப்பின்போது ராகுல் காந்திக்கு 6வது வரிசையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் மலிவான அரசியல் இது என்று காங்கிரஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
சமீபத்தில் 5 மாநில தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாதபோது, தோல்விக்கு மேலிடத்திற்குதான் பொறுப்புள்ளது என்று கூறியிருந்தார் நிதின் கட்கரி. இப்போது ராகுல் காந்தியுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்த டெல்லி அரசியல் விமர்சகர்களின் புருவங்கள் உயர்ந்துள்ளன.