நிவர் புயலால் நிலைகுலைந்த மாவட்டங்கள்.. 10 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை: நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது , மின்சாரம் துண்டிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சுமார் 10 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்ககடலில் கடந்த 18ம் தேதி உருவான காற்றழுத்தம் தீவிரம் அடைந்து புயலாக மாறியது. நிவர் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடந்தது.
நிவர் கடந்து போன சுவடின் ஈரம் கூட காயலையே... வங்க கடலில் அடுத்த தாழ்வு பகுதி- தமிழகத்திற்கு வார்னிங்
கொட்டிய மழை
இந்த புயல் திருவண்ணாமலை, வேலூர் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றது. இதனால் புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின.
குளம்
மரக்காணம் அருகே புயல் கரையை கடந்த சமயத்தில் புதுச்சேரியில் 30 செமீ மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. மீட்பு குழுவினரும் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியின் நகரப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய மரங்கள் சரிந்தன. சின்னமுதலியார் சவாடி, பொம்மையார்பாளையத்தில் 10 வீடுகள் சரிந்தன. திடீர் மழையால் இந்திராகாந்தி சிலையை சுற்றி குளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்தது.
வெள்ளம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. உடனடியாக மீட்பு குழுவினர் மரங்களை அகற்றினர். கனமழையால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பலர் வெள்ளநீரில் தத்தளித்தனர். விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் சுமார் 500 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம், புதிய பேருந்து நிலையம், சாலமேடு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. விக்கிரவாண்டி-கும்பகோணம் நான்குவழிச்சாலை பணிகளால் மழைவராயனூர் உள்பட 10 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மரங்கள்
கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. புயல் மழை பாதிப்பால் 55226 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் முழுவதும் 321 மரங்கள் முறிந்து விழுந்தன. 12 கால்நடைகள் பலியாகின. குறிஞ்சிப்பாடி, ஜேடர்பாளையம் உள்பட பல பகுதிகளில் 200 எக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரப்பேட்டை பகுதிகளில் கடல்நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சுமார் 5000 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டன.
எவ்வளவு பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வீடுகள் இடிந்து விழுந்தன. நெல், வாழை உள்பட 30 யிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது.100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநுர் புகுந்தது. 12 கால்நடைகள் இறந்தன. புயல் பாதித்த 4மாவட்டங்களில் புயல் காரணமாக 77 வீடுகள் இடிந்து விழுந்தன. 47338 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தன.
2015ல் போல் பாதிப்பு
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக முடிச்சூரில் 2015ல் ஏற்பட்டது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, சிறுதாவூர், கோட்டூர்புரம், மாம்பலம், புரசைவாக்கம், வியாசர்பாடி, எண்ணூர், ஆர்கே நகர், எண்ணூர் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தன. சுமார் 10 லட்சம் மக்கள் நிவர் புயலால் பாதிக்கப்பட்டனர். மின்சாரம் இன்றி, தண்ணீரில் அவதிப்பட்டனர்.