நிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
நிவர் புயல் பாதிப்புகளை கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் மீட்பு பணிகளை கவனிக்கும் வகையில் 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் புயல் நிலவரத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிவர் புயல் தற்போது கடலூரிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் அதற்குப் பிறகு அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் அதற்கு பிறகு வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து 25ஆம் தேதி இரவு மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் புயல் நிலவரத்தை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications