சென்னையில் நடக்கும் கார் ரேஸுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நிவேதா பெத்துராஜ் மறுப்பு
சென்னை: சென்னையில் கார் பந்தயத்தில் தொடர்பு என என்னை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. அவை ஒன்றும் உண்மை இல்லை என்று நடிகை நிவேதா பெத்துராஜ் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் எனக்காக பணம் செலவிடப்பட்டதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படியான தகவல்களை பரப்பும் சிலர் மனிதாபிமானத்துடன் தகவலை பரப்புவதற்கு முன்னர் சரிபார்த்துவிடுவார்கள் என்று நினைத்துதான் நான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன்.

கடந்த சில நாட்களாக பரவும் பொய் செய்தியால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன்பு யோசித்து பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவர். எனது 16 வயது முதலேயே நான் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருந்து வருகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் வாடகை வீட்டில் நான் எனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறேன். திரைப்படங்களில் கூட நான் இதுவரை எநத் தயாரிப்பாளர்களிடமோ இயக்குநர்களிடமோ கதாநாயகன்களிடமோ பட வாய்ப்பு கொடுங்கள் என கேட்டது கிடையாது. இதுவரை 20 படங்களில் நடித்திருக்கிறேன். அவை எல்லாமே என்னை தேடி வந்த வாய்ப்புகள்தான். நான் யாரையும் தேடி போகவில்லை.
நான் ஒரு போதும் பணத்திற்காகவோ வேலைக்காகவோ பேராசையுடன் இருந்தது கிடையாது. 2002ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 2013 ஆம் ஆண்டு கார் பந்தயத்தில் விருப்பத்தின் பேரில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதிலும் சென்னையில் நடக்கும் போட்டிகள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் என்னை பற்றி பேசப்படும் செய்திகள் எதுவுமே உண்மையில்லை, வதந்தி என்பது அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் நினைப்பது போல் இல்லை. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கு பிறகு நான் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறேன். அதுவும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போல்! இதை நான் சட்டரீதியாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை.
பத்திரிகைத் துறையில் மனிதம் மீதம் இருக்கிறது என நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளை சரி பார்த்துவிட்டு பிரசுரம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தை மேலும் மனஉளைச்சலுக்குள்ளாகாதீர்கள். எனக்காக இதுவரை ஆதரவு தெரிவித்து கருத்துகளை பேசியவர்களுக்கு நன்றி. வாய்மை வெல்லும். இவ்வாறு நிவேதா பெத்துராஜ் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications