பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிப்பு இல்லை.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்
சென்னை: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளார்கள்.
தமிழகத்தில் 13ம் தேதி (திங்கள்), 14ம் தேதி (செவ்வாய்) அரசு விடுமுறையாக அறிவித்தால், தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

அதை ஏற்று தமிழக அரசும் 13, 14ம் தேதி விடுமுறையாக அறிவிக்கும் என கடந்த 2 நாட்களாக செய்திகள் பரவியது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் விடுமுறை விடுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரம் ஆசிரியர்கள் சிலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள், செவ்வாய் கூடுதல் விடுமுறை அரசு அறிவித்தால் கூடுதலாக இரண்டு சனிக்கிழமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டியது வரும். ஆசிரியர்களாகிய நாங்கள் சனிக்கிழமை விடுமுறையையே விரும்புகிறோம். அதனால் அரசு பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் விடுமுறை விடாதது எங்களுக்கு மகிழ்ச்சியே" என்று கூறினார்கள்.
அதேநேரம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அலவலகங்களில் 11ம் தேதி (நேற்று) முதல் 19ம் தேதி வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கு மட்டுமே இந்த தொடர் விடுமுறை பொருந்தும் என்றும், பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் வழக்கம்போல் திங்கள், செவ்வாய் பணிக்கு வர வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications