சீமானுக்கு வந்த தலைவலி போச்சு.. விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி!
சென்னை: ஜனதா கட்சியின் 'ஏர் உழவன்' சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரமணியம் சுவாமியின் ஜனதா கட்சி முன்பு தேசியக் கட்சியாக இருந்து வந்தது. இக்கட்சியின் சின்னமாக ஏர் உழவன் சின்னம் இருந்து வந்தது. ஆனால் சின்னத்தை தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான எம்.பி, எம்எல்ஏக்கள் பலம் அந்தக் கட்சிக்கு இல்லாததால் ஏர் உழவன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது. மேலும் ஜனதா கட்சிக்கு தேசிய கட்சி என்ற அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஏர் உழவன் சின்னம் போல காட்சியளிக்கும் விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரி ஜனதா கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேசிய கட்சியான ஜனதா கட்சி, 1977 ம் ஆண்டு முதல் ஏர் உழவன் சின்னத்தை பயன்படுத்தி வந்துள்ளது.
தங்கள் சின்னத்தைப் போல நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், ஜனதா கட்சி தற்போது அங்கீகாரத்தை இழந்து விட்டதால், ஏர் உழவன் சின்னத்தை தக்க வைத்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தி உத்தரவு பிறபித்துள்ளது என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜனதா கட்சிக்கு ஏர் உழவன் சின்னத்தையும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை மனுதாரர் கட்சி தரப்பில் தாக்கல் செய்யவில்லை எனவும், ஏற்கனவே அங்கீகாரத்தை இழந்த கட்சிக்கு சின்னத்தை தக்க வைக்க உரிமையில்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவையும் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications