11 நாட்களாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்?
சென்னை: சர்வதேச அளவில் பல நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படு வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 11ஆவது நாளாக எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
எப்போது தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதோ, அப்போது முதல் பெட்ரோல், டீசல் உயர்த்தப்படவில்லை. மாறாக பெட்ரோல், டீசல் விலை சில முறை குறைக்கப்பட்டது.
சென்னையில் தொடர்ந்து 11ஆவது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.8 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 85.88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 80.87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மராட்டியத் தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.98 ரூபாய்க்கும், டீசல் 87.96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தற்போது தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் 90.77 ரூபாய்க்கும் டீசல் 83.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 62.95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.