இரண்டு வாரம் ஓவர்... பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.. காரணம் இதுதான்
சென்னை: தேர்தல் நெருங்குவதால் கடந்த இரண்டு வார காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் ஒரு லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 81.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாகக் கடந்த சிவ மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐயும் தாண்டியும் விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதால் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அதன்பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கும், டீசல் 86.45 ரூபாய்க்குமே விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 66 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த மாதத்தைவிட அதிகம் என்றாலும்கூட விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை.