25வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. சென்னையில் விலை என்ன?
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 25வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுக்க கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் நிச்சயமற்ற நிலை நிலவி வருகிறது. இதனால் உலகம் முழுக்க பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வந்தது, இந்தியாவிலும் கடந்த மாதம் தொடர்ச்சியாக 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. மார்ச் 6ம் தேதி வரை தினமும் பெட்ரோல் டீசல் விலை 30 பைசா முதல் 80 பைசா வரை தினமும் உயர்ந்தது. இது மக்கள் இடையே பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்தது. பல மாநிலங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளின் விலைகள் உயர்ந்தன.
இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 25வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த இரண்டு வாரமாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் 121 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 104 ரூபாயை தாண்டி உள்ளது.
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல்! நாங்க ரெடி நீங்க ரெடியா..? மாநிலங்களை கேட்கிறார் மத்தியமைச்சர் பூரி..!